ஜெருசலம்: இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த அனுப்பிவைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் விமானம் ஒன்று இஸ்ரேலிய வான்வெளிக்குள் நுழைந்ததாகவும் அதை எதிர்கொண்டு அழிக்க முதன்முறையாக சி-டோம் தற்காப்புக் கட்டமைப்பைப் பயன்படுத்தியதாகவும் அந்நாட்டின் தற்காப்புப் படை ஏபர்ல் 9ஆம் தேதியன்று தெரிவித்தது.
எதிரிப் படைகள் பாய்ச்சும் ஏவுகணைகள், அனுப்பிவைக்கும் விமானங்கள் ஆகியவற்றை சுட்டு வீழ்த்தும் நோக்குடன் இந்த சி-டோம் தற்காப்புக் கட்டமைப்பு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலியக் கடற்படைக்குச் சொந்தமான கப்பிலிருந்து ஏவுகணைகள் பாய்ச்சப்படும்.
இதே போன்று இஸ்ரேலிய விமானப் படை பயன்படுத்தும் தற்காப்பு முறை அயர்ன்-டோம் என அழைக்கப்படுகிறது.
“இஸ்ரேலிய நேரப்படி ஏப்ரல் 8ஆம் தேதி மாலை சந்தேகத்துக்குரிய விமானம் இஸ்ரேலிய வான்வெளிக்குள் நுழைந்ததை அடுத்து, எச்சரிக்கை ஒலி ஒலிக்கப்பட்டது. அந்த விமானத்தை சி-டோம் தற்காப்புக் கட்டமைப்பின் ஏவுகணை வெற்றிகரமாகச் சுட்டு வீழ்த்தியது,” என்று இஸ்ரேலியத் தற்காப்பு படை அறிக்கை வெளியிட்டது.
இதில் இஸ்ரேலுக்குப் பொருட்சேதம், உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.