பெட்டாலிங் ஜெயா: மலேசிய அரசியல்வாதிகள் அனைவரும் சமயம் மற்றும் இனம் தொடர்பான தீவிரக் கொள்கைகளைத் தவிர்த்து மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்துச் செயல்பட வேண்டும் என்று அந்நாட்டு மாமன்னர் இப்ராகிம் இஸ்கந்தர் வலியுறுத்தியுள்ளார்.
அவர் ஏப்ரல் 9ஆம் தேதியன்று அம்னோ துணைத் தலைவர் முகம்மது ஹசான், அம்னோ இளையரணித் தலைவர் டாக்டர் முகம்மது அக்மால் சாலே, மலாக்கா அம்னோ தலைவர் அப் ரவுஃப் யுசோ, ஜனநாயக செயல் கட்சியின் துணைத் தலைமைச் செயலாளர் லியூ சின் டோங் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
முதிர்ச்சியுடன், பக்குவமாகச் செயல்பட்டு மலேசியர்களுக்கு முன்னுதாரணமாக அரசியல்வாதிகள் இருக்க வேண்டும் என்று மாமன்னர் தெரிவித்தார். இதன்மூலம் மலேசியாவில் உள்ள பல்லின மக்கள் ஒற்றுமையுடன் இருப்பர் என்று அவர் கூறினார்.