பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தின் சில பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளது. காற்று மாசடைந்ததை அடுத்து, புகைமூட்டம் காரணமாக சில இடங்களில் கட்டடங்களைத் தெளிவாகப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், அடுத்த சில நாள்களில் மழை பெய்யும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளதால் வானம் தெளிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் 9ஆம் தேதியன்று சிலாங்கூரின் கிள்ளான், பந்திங் ஆகிய நகரங்களில் காற்றின் தரம் மக்களின் உடல்நிலையைப் பாதிக்கக்கூடிய அளவில இருந்ததாக மலேசிய சுற்றுப்புறத் துறை வெளியிட்ட தரவுகள் காட்டுகின்றன.
அண்டை மாநிலமான பாகாங்கில் உள்ள சில வனப்பகுதிகளில் தீ மூண்டதால் சிலாங்கூரில் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடும் வெப்பநிலை காரணமாக வனப்பகுதிகளில் தீ மூண்டிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.