மெட்டா, டிக்டாக் நிறுவனங்களுக்கு மலேசியா உத்தரவு

மெட்டா, டிக்டாக் நிறுவனங்களுக்கு மலேசியா உத்தரவு

2 mins read
a6179ec5-752d-46e0-be00-1a79c75d15d2
2024ன் முதலாவது காலாண்டில் தீங்கிழைக்கும் உள்ளடக்கத்தைக் கொண்ட 52,000 சம்பவங்கள் சமூக ஊடகத் தளங்களில் தலைதூக்கின. - படம்: ராய்ட்டர்ஸ்

கோலாலம்பூர்: தீங்கிழைக்கும் உள்ளடக்கத்தை எதிர்க்க மெட்டா, டிக்டாக் போன்ற தொழில்நுட்ப பெருநிறுவனங்கள் தகுந்த திட்டங்களை வகுக்க வேண்டும் என்று மலேசியா ஏப்ரல் 9ஆம் தேதி உத்தரவிட்டது.

முஸ்லிம்கள் அதிகம் வாழும் மலேசியாவில், சமயம் தொடர்பான சர்ச்சைகளால் எழும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண பிரதமர் அன்வார் நிர்வாகம் போராடிக்கொண்டிருக்கும் வேளையில், சமூக ஊடகத் தளங்களில் மற்றவர் மனங்களைப் புண்படுத்தும் பதிவுகள் அதிகரித்து வருகின்றன. இதன் அடிப்படையில்தான் அரசாங்கத்தின் இந்தப் புதிய உத்தரவு வந்துள்ளது.

2024ன் முதலாவது காலாண்டில் தீங்கிழைக்கும் உள்ளடக்கத்தைக் கொண்ட 52,000 சம்பவங்கள், மெட்டா, டிக்டாக் உட்பட பல சமூக ஊடகத் தளங்களில் தலைதூக்கின. கடந்த ஆண்டு முழுமைக்கும் இதை ஒப்பிட்டு பார்த்தால் அந்த எண்ணிக்கை 43,000.

மேற்கண்ட இரு தொழில்நுட்ப பெருநிறுவனங்களின் பிரதிநிதிகள், ஏப்ரல் 8ஆம் தேதி மலேசிய தொடர்புத்துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபட்சிலைச் சந்தித்தனர். அப்போது, மோசடி, கள்ளத்தனமான சூதாட்டம் தொடர்பான பதிவுகளை அணுக்கமாகக் கண்காணித்து அவற்றை தங்கள் சமூக ஊடகத் தளங்களிலிருந்து அகற்ற வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

“அதன் தொடர்பில் தாங்கள் எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் குறித்து டிக்டாக், மெட்டா நிறுவனங்கள் மலேசிய அரசாங்கத்திடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று மலேசிய தொடர்புத்துறை, பல்லூடக ஆணையம் மற்றும் மலேசிய காவல்துறை ஆகியவை ஏப்ரல் 9ஆம் தேதி வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.

3R எனப்படும் இனம், சமயம், அரச மரியாதை போன்றவற்றை மையமாகக் கொண்ட பதிவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவ்விரு அமைப்புகளுக்கும் வலியுறுத்தப்பட்டது.

அண்மையில் ‘கேகே’ பல்பொருள் அங்காடியில் ‘அல்லா’ என்ற பெயர் பதிக்கப்பட்ட காலுறைகள் விற்கப்பட்ட சம்பவம் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனால் நாடு முழுவதும் சமூக பதற்றம் அதிகரித்ததன் விளைவாக, ‘கேகே’ பல்பொருள் அங்காடிக் கிளைகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.

‘கேகே’ பல்பொருள் அங்காடிக் குழுமத்தின் நிறுவனர் சாய் கீ கான், நாட்டு மக்களிடமும் மலேசிய மாமன்னரிடமும் பலமுறை மன்னிப்பு கேட்டும், நாட்டு மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தியதன் காரணமாக மார்ச் 26ஆம் தேதி அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஃபேஸ்புக் தவிர, வாட்ஸ்அப், இன்ஸ்டகிராம் தளங்கள் மெட்டா நிறுவனத்துக்குச் சொந்தமானவை. குறும் காணொளி தளமான டிக்டாக் சீன நிறுவனமான பைட்டான்சுக்குச் சொந்தமானது.

இந்தப் பிரச்சினை ஒருவழியாக அடங்கிபோன வேளையில், மற்றொரு புதிய பிரச்சினை மிக அண்மையில் தலைதூக்கியது. மலேசிய காலணி நிறுவனத்தின் புதிய காலணிகளில் உள்ள வர்த்தக சின்னம் ‘அல்லா’ என்ற எழுத்தைப் போல இருக்கிறது என்ற விவகாரம் பின்னர் பதற்றமாக வெடித்தது. உடனே காவல்துறை தலையிட்டு, அந்நிறுவனம் விற்பனைக்கு வைத்திருந்த 1,000க்கு மேற்பட்ட காலணிகளைக் கைப்பற்றியது.

‘வெர்ன்ஸ் ஹோல்டிங்ஸ்’ எனும் அந்நிறுவனம் தனது செயலுக்கு மன்னிப்புக் கேட்டதுடன் அந்தக் காலணிகளின் விற்பனையை நிறுத்திக்கொண்டது.

குறிப்புச் சொற்கள்