ஹாங்காங்: ஹாங்காங் மிகவும் பரபரப்பான கௌலூன் வட்டாரத்தில் உள்ள மிக நெரிசலான குடியிருப்புக் கட்டடத்தில் புதன்கிழமை (ஏப்ரல் 10) மூண்ட தீ விபத்தில் ஐவர் மாண்டனர். 34 பேர் காயமுற்றனர் என்று அந்நகரத்தின் மருத்துவமனையும் தீயணைப்புச் சேவையும் தெரிவித்தன.
16 மாடிகள் கொண்ட அக்கட்டடத்தில் உள்ள மக்கள் தங்களைக் காப்பாற்றும்படி குளிக்கும் துண்டுகளைக் கொண்டு கீழே உள்ளவர்களுக்கு சமிக்ஞை செய்தனர் என்றும் அக்கட்டடத்தில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் தீ மூண்டது என்றும் ஹாங்காங்கின் தேசிய ஒலிபரப்பு நிறுவனமான ஆர்டிஎச்கே தெரிவித்தது.
மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ள கட்டடத்தைச் சுற்றியுள்ள சாலைகள் மூடப்பட்டன. அதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கட்டடத்தில் உள்ள சுமார் 150 பேர் மீட்கப்பட்டனர், 40 பேர் பொது மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்று ஹாங்காங் அரசு தெரிவித்தது.
காயம்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க உத்தரவிட்ட ஹாங்காங் தலைமை நிர்வாகி ஜான் லீ, தீ மூண்டதன் காரணத்தக் கண்டறியும்படி பல்வேறு அரசாங்க அமைப்புகளைக் கேட்டுக்கொண்டார்.
தீயணைப்பு சேவைக்குத் தகவல் கிடைத்த ஒருமணி நேரத்துக்குள் காலை 8.54 மணிக்கு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. குறைந்தது அறுவர் கடுமையாகக் காயம்பட்டிருக்கிறார்கள் என்றும் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றும் மருத்துவமனை தகவல் தெரிவிப்பதாக என்று ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது.