சோல்: தென்கொரியாவில் ஏப்ரல் 10ஆம் தேதியன்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் அபார வெற்றி பெற்றுள்ளன.
இது அந்நாட்டு அதிபர் யூன் சுக் யோலுக்கும் அவரது கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூர் நேரப்படி ஏப்ரல் 11ஆம் தேதி அதிகாலை 4.55 மணி நிலவரப்படி 99 விழுக்காட்டுக்கும் அதிகமான வாக்குகள் எண்ணப்பட்டுவிட்டதாக தென்கொரியத் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
300 நாடாளுமன்றத் தொகுதிகளில் 170க்கும் அதிகமான தொகுதிகளை எதிர்க்கட்சியான ஐனநாயகக் கட்சி கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்நாட்டின் தேசிய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதாக நம்பப்படும் இன்னொரு கட்சி குறைந்தது 10 தொகுதிகளைக் கைப்பற்றும் என்று கூறப்படுகிறது.
“வாக்காளர்கள் என்னைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதிபர் யூன் சுக் யோலின் அரசாங்கம் மீது தென்கொரிய மக்கள் கொண்டுள்ள அதிருப்தியையும் எதிர்ப்பையும் இது காட்டுகிறது. மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்து சமுதாயத்தை மேம்படுத்தும் பொறுப்பை ஜனநாயகக் கட்சிக்கு மக்கள் தந்துள்ளனர்,” என்று ஜனநாயகக் கட்சியின் தலைவர் திரு லீ ஜே மியூங் தெரிவித்தார்.
இதற்கிடையே, தேர்தலில் ஆளும் கட்சி தோல்வியைத் தழுவியதை அடுத்து, பதவி விலக தென்கொரியப் பிரதமர் ஹான் டக் சூ முன்வந்திருப்பதாக அறியப்படுகிறது.
ஆளும் கட்சியின் தலைவரான திரு ஹான் டோங் ஹூன் பதவி விலகிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.