வாஷிங்டன்: நட்சத்திரமாகத் திகழ்ந்து பின்னர் கொலை வழக்கில் சிக்கிக்கொண்ட முன்னாள் அமெரிக்கக் காற்பந்து (அமெரிக்கன் ஃபுட்பால்) வீரர் ஓ.ஜே.சிம்ப்சன் புதன்கிழமையன்று (ஏப்ரல் 10) மாண்டார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு வயது 76.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் தனது முன்னாள் மனைவி நிக்கோல் பிரவுனையும் அவரின் நண்பர் ரானல்ட் கோல்ட்மன் என்ற ஆடவரையும் கத்தியால் குத்திக் கொன்றதாக 1994ஆம் ஆண்டில் சிம்ப்சன் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அக்குற்றங்களை அவர் புரியவில்லை என்று நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு தீர்ப்பளிக்கப்பட்டது.
நூற்றாண்டின் ஆகப் பெரிய நீதிமன்ற விசாரணை என்று கூறப்பட்ட அந்த விசாரணை உலகின் கவனத்தை ஈர்த்தது.
நடிகருமான சிம்ப்சன் மீது பிறகு ஆயுதம் ஏந்தியபடி திருட்டில் ஈடுபட்டது, துப்பாக்கி முனையில் இருவரைக் கடத்தியது ஆகியவற்றின் தொடர்பில் 12 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. 2008ஆம் அண்டில் அக்குற்றங்கள் நிரூபிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து சிம்ப்சன் ஒன்பது ஆண்டுகளுக்கு அமெரிக்காவின் நெவாடா மாநிலச் சிறையில் வைக்கப்பட்டார்.
1960களிலும் 70களிலும் ஆகச் சிறந்த, மிகப் பிரபலமான விளையாட்டாளர்களில் ஒருவராக சிம்ப்சன் திகழ்ந்தார்.