சோல்: வடகொரியாவின் அணுவாயுத அச்சுறுத்தலுக்கு இடையே அமெரிக்கா உள்ளிட்ட மூன்று நாடுகள் கடற்படைப் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளன.
ஏப்ரல் 11, ஏப்ரல் 12 ஆகிய இரு நாள்கள் நடைபெற்ற பயிற்சியில் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த கப்பற் படைவீர்கள் கலந்துகொண்டனர்.
வடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தலுக்கு எதிராகவும் தாக்குதலைச் சமாளிக்க ஆயத்தமாக இருப்பதை உறுதிசெய்யவும் பயிற்சி நடைபெற்றதாக தென்கொரிய கடற்படை வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 12) கூறியது.
தென்கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான அனைத்துலகக் கடற்பகுதியில் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்ப் பயிற்சியில் மூன்று நாட்டு வீரர்களும் கலந்துகொண்டனர்.
நீருக்கடியிலான தாக்குதலுக்கும் வடகொரியா அச்சுறுத்தி வருவதால் நீர்மூழ்கி எதிர்ப்பு, நீர்மூழ்கியில் இருந்து ஏவப்படும் ஏவுகணை எதிர்ப்பு ஆகியவற்றில் பயிற்சி மேற்கொள்ளப்பட்டதாக தென்கொரிய கடற்படை கூறியது.
ஆயுதங்களைத் திரட்டுவதில் தீவிரம் காட்டி வரும் வடகொரியா, கடந்த வாரம் நவீன ஏவுகணையைச் சோதித்துப் பார்த்தது.
புவிசார் அரசியல் நிலவரம் தடுமாற்றத்தில் இருக்கும் தற்போதைய நேரம்தான் போருக்கு ஆயத்தமாக சரியான நேரம் என்று ஏப்ரல் 10ஆம் தேதி வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்து இருந்தார்.