கோலாலம்பூர்: இஸ்ரேலிய ஒற்றர் என நம்பப்படும் ஷலோம் அவிட்டான் என்பவர் மீது ஆறு துப்பாக்கிகளையும், 158 தோட்டாக்களையும் வைத்திருந்ததாக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அந்தக் குற்றச்சாட்டுகள் ஆங்கிலத்தில் வாசிக்கப்பட்ட பிறகு, 38 வயதான அவர் வழக்கு விசாரணையைக் கோரினார். “எனக்குப் புரிகிறது. நான் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளவில்லை,” என்றார் அவர்.
துப்பாக்கி தொடர்பான சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு அவர் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனையை எதிர்நோக்குகிறார்.
ஆயுதங்கள் தொடர்பான சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு அவர் 10,000 ரிங்கிட் அபராதம் அல்லது ஏழாண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்நோக்குகிறார்.
அவிட்டானுக்குப் பிணை வழங்கப்படவில்லை.
அடுத்த வழக்கு விசாரணை மே 21ஆம் தேதி நடைபெறும்.
அவிட்டான் காலை 10.50 மணிவாக்கில் நீதிமன்ற வளாகத்திலிருந்து காவல்துறை வண்டியில் கொண்டுசெல்லப்பட்டார்.
மார்ச் 27ஆம் தேதி ஜாலான் அம்பாங்கில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அவர் கைதுசெய்யப்பட்டார். அவரிடம் ஆறு துப்பாக்கிகளும் 200 தோட்டாக்களும் இருந்தன.
இருப்பினும், 158 தோட்டாக்கள் மட்டுமே வைத்திருந்ததாக அவர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.
குடும்பப் பிரச்சினை காரணமாக மற்றோர் இஸ்ரேலியரைக் கொலைசெய்ய மலேசியாவுக்கு வந்ததாக விசாரணையின்போது அவிட்டான் கூறியதாக காவல்துறை தெரிவித்தது.
இதுவரை அந்த வழக்கின் தொடர்பில் மொத்தம் 16 பேர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
திருமணமான உள்ளூர் தம்பதியரும் ஆடவர் ஒருவரும் அவர்களில் அடங்குவர். 40, 42 வயதான அந்தத் தம்பதியர் அவிட்டானிடம் துப்பாக்கிகளை விற்றதாகக் கூறப்படுகிறது.
மற்றோர் ஆடவர், அவிட்டானின் ஓட்டுநர் என்று நம்பப்படுகிறது.