வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஈரான் விரைவில் இஸ்ரேலைத் தாக்கக்கூடும் என்று எதிர்பார்த்ததாக ஏப்ரல் 12ஆம் தேதி கூறியுள்ளார்.
அவ்வாறு தாக்கவேண்டாம் என டெஹ்ரானை அவர் எச்சரித்தார்.
ஈரானுக்கு அவர் விடுக்கும் தகவல் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அமெரிக்க அதிபர், “வேண்டாம்,” எனக் குறிப்பட்டதுடன் இஸ்ரேலைப் பாதுகாக்கும் வாஷிங்டனின் கடப்பாட்டையும் கோடிட்டுக் காட்டினார்.
“இஸ்ரேலைத் தற்காக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இஸ்ரேலுக்கு ஆதரவு தருவோம். ஈரான் அதன் தாக்குதல் முயற்சியில் வெற்றிபெறாது,” என்றார் அவர்.
ரகசியத் தகவலைத் தாம் அம்பலப்படுத்தப் போவதில்லை என்று குறிப்பிட்ட திரு பைடன், விரைவில் ஈரான் தாக்குதல் நடத்தும் என்று எதிர்பார்த்ததாகக் கூறினார்.
வெள்ளை மாளிகையில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
ஏப்ரல் 1ஆம் தேதி டமாஸ்கசில் உள்ள ஈரானியத் தூதரம் தாக்கப்பட்டதில் ஈரானிய புரட்சிப் படையின் மூத்த தளபதி உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டனர்.
ஈரான் அதற்குப் பதிலடி தரக்கூடும் என்று பல தரப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் எச்சரிக்கை வெளிவந்துள்ளது.
இந்நிலையில், இந்தியா, ஃபிரான்ஸ், போலந்து, ரஷ்யா ஆகியவை மத்திய கிழக்கு வட்டாரத்திற்குச் செல்ல வேண்டாமென அவற்றின் குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
ஏப்ரல் 12ஆம் தேதி, ஈரானிலிருந்து வெளியேறும்படி ஜெர்மனி அதன் குடிமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
ஈரானியத் தூதரகத் தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்றுக்கொள்ளவில்லை. எனினும், “இஸ்ரேல் இதற்காகத் தண்டிக்கப்பட வேண்டும்; தண்டிக்கப்படும்,” என்று கூறிய ஈரானியத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி, ஈரானிய மண்ணில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு ஈடான பதிலடி தரப்படும் என்று சூளுரைத்துள்ளார்.
முன்னதாக, இஸ்ரேல் மீதான ஈரானியத் தாக்குதல் மிரட்டலாக விளங்குவதாகக் கூறிய வெள்ளை மாளிகைப் பேச்சாளர் ஜான் கிர்பி, தாக்குதல் எப்போது நடைபெறக்கூடும் என்பது குறித்த விவரங்களை வெளியிடவில்லை.