தெஹ்ரான்: இஸ்ரேல் மீது ஈரான் முதல்முறையாக நேரடித் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேலை நோக்கி அது ஏவுகணைகள் பாய்ச்சியதுடன் நூற்றுக்கணக்கான ஆளில்லா வானூர்திகளையும் அனுப்பியது.
இந்நிலையில், இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆயிரக்கணக்கான ஈரானியர்கள் தலைநகர் தெஹ்ரானில் உள்ள பாலஸ்தீன சதுக்கத்தில் திரண்டு இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் எதிராக முழக்கமிட்டனர்.
ஈரானிய, பாலஸ்தீனக் கொடிகளை அவர்கள் அசைத்து ஆரவாரம் செய்தனர்.
‘அடுத்த அடி இதைவிட அதிக மூர்க்கத்தனத்துடன், பயங்கரமானதாக இருக்கும்’ என்ற வாசகம் கொண்ட பதாகை அவ்விடத்தில் பொருத்தப்பட்டது.
இதற்கு முன்னதாக பாலஸ்தீன சதுக்கத்தில் கடந்த பல நாள்களாக இன்னொரு பதாகை தொங்கவிடப்பட்டிருந்தது. அதில் இருந்த வாசகம் இஸ்ரேலியர்களின் ஹிப்ரு மொழியில் இருந்தது. அது அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இருந்தது.
‘ஆபத்து வருகிறது, பாதுகாப்பான இடத்தை நோக்கி விரையுங்கள்,’ என்ற தொனியில் அந்த எச்சரிக்கை அமைந்திருந்தது.
சிரியா தலைநகர் டமாஸ்கசில் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஈரானியத் தூதரகத்துக்குச் சொந்தமான ஐந்து மாடிக் கட்டடத்தை இஸ்ரேல் தகர்த்தது. அதில் ஈரானியப் புரட்சிப் படையைச் சேர்ந்த ஏழு அதிகாரிகள் மாண்டனர். மாண்டவர்களில் இருவர் ஜெனரல்கள்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.