புதுடெல்லி: இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு விமானப் பயணம் மேற்கொள்வதற்கான நேரம் ஒரு மணி நேரம் வரை அதிகரிக்கக்கூடும். மேலும், விமானப் பயணக் கட்டணமும் உயரலாம்.
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளதால் ஏர் இந்தியா, விஸ்தாராவும் வெளிநாட்டு விமானங்களும் ஈரானிய வான்வெளியில் செல்வதைத் தவிர்த்துக் கொண்டுள்ளன.
புதுடெல்லி-டெல் அவிவ் பயணப் பாதையில் ஏர் இந்தியா விமானம் சனிக்கிழமை (ஏப்ரல் 13) இயக்கப்பட்டது. ஆனால், அவ்விரு நகர்களுக்கு இடையே வாரத்திற்கு நான்கு முறை விமானச் சேவையை வழங்குவது குறித்து ஏர் இந்தியா பரிசீலித்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த அறிவிப்பு வெளிவரும்வரை, ஈரான் அல்லது இஸ்ரேலுக்குச் செல்ல வேண்டாம் என இந்தியா அதன் குடிமக்களுக்கு வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியது.
ஏர் இந்தியா 161 விமானம், சனிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு புதுடெல்லியில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்டது. ஆனால், ஈரானிய வான்வெளியில் அது செல்லவில்லை. மாறாக, வடக்குப் பயணப் பாதை வழியாக அது சென்றது.
“மத்திய கிழக்கில் உருவெடுத்துவரும் நிலவரம் காரணமாக, எங்களது விமான பயணப் பாதைகள் சிலவற்றில் மாற்றங்களைச் செய்கிறோம்,” என்று விஸ்தாரா பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.