ஷா ஆலம்: ஐக்கிய அரசாங்கம், இந்தியச் சமூகத்தின் நலனை நிராகரித்ததே இல்லை என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.
மாறாக, அச்சமூகத்தின் வளர்ச்சிக்கு உதவ பல்வேறு திட்டங்களை அரசாங்கம் வகுத்துள்ளதாக அவர் சொன்னார்.
நாட்டில் உள்ள ஒட்டுமொத்த இந்தியச் சமூகத்தின் நலன் கருதியே ஒவ்வொரு திட்டமும் வகுக்கப்படுவதாக அவர் எடுத்துரைத்தார்.
கோலாலம்பூர், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, பினாங் ஆகிய பகுதிகளில் கடுமையான வறுமை நிலை ஒழிக்கப்பட்டதை திரு. அன்வார் சுட்டினார்.
எந்த இனமாக இருந்தாலும் வறுமை ஒழிப்புக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் அத்தகைய முயற்சிகள் இந்தியச் சமூகத்தையும் உள்ளடக்கியதாக இருந்தன என்றும் திரு. அன்வார் கூறினார்.
“எனவேதான், கடுமையான வறுமையை ஒழிப்பதற்கு முன்னுரிமை அளித்தேன். எண்ணிக்கையைப் பொறுத்தவரை, மலாய்க்காரர்கள் பெரும்பான்மையாக இருந்தாலும், கோலாலம்பூரிலும் நெகிரி செம்பிலானிலும் இத்திட்டத்தின்கீழ் அதிகம் பலனடைந்தவர்கள் இந்தியச் சமூகத்தினரே,” என்று திரு. அன்வார் விவரித்தார்.
ஐந்தாவது அனைத்துலக மாநாடு மற்றும் இந்திய அரசியல் மேதையான டாக்டர் அம்பேத்கரின் 133வது பிறந்தநாள் மற்றும் நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தில் தொடக்க உரையாற்றியபோது திரு. அன்வார் இதனைக் கூறினார்.