வாஷிங்டன்: ஈரானுக்கு எதிராகப் பதிலடித் தாக்குதல் நடத்த இஸ்ரேல் முடிவெடுத்தால் அமெரிக்கா அதில் பங்கேற்காது என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஏப்ரல் 13ஆம் தேதி இரவு இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலிய வான்வெளிக்குள் அது நூற்றுக்கணக்கான ஆளில்லா வானூர்திகளை அனுப்பியதுடன் ஏவுகணைகளையும் பாய்ச்சியது.
அவற்றில் பலவற்றை அமெரிக்கப் படைகளின் உதவியோடு சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியது.
80க்கும் மேற்பட்ட ஆளில்லா வானூர்திகளையும் குறைந்தது ஆறு ஏவுகணைகளையும் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்கப் படைகள் தெரிவித்தன.
இந்த ஏவுகணைகள் ஈரான் மற்றும் ஏமனிலிருந்து இஸ்ரேல் நோக்கிப் பாய்ச்சப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.
ஈரான் நடத்திய தாக்குதலில் ஒருவருக்கு மட்டுமே மோசமான காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்த 7 வயது இஸ்ரேலிய சிறுமி மருத்துவமனையில் உயிருக்குப் போராடுவதாக இஸ்ரேலிய அதிகாரிகள் கூறினர்.
ஈரான் மீது இஸ்ரேல் பதிலடித் தாக்குதல் நடத்தினால் அதில் அமெரிக்கா பங்கேற்காது என்று தெரிவித்த அதிபர் பைடன், இஸ்ரேலைத் தற்காக்க அமெரிக்கா தொடர்ந்து உதவும் என்று கூறினார்.
இஸ்ரேல் பதிலடித் தாக்குதல் நடத்தினால் மத்திய கிழக்கில் நிலைமை மேலும் மோசமடையும் என்று அதிபர் பைடனுடன் ஏப்ரல் 14ஆம் தேதியன்று தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கவலை தெரிவித்தார் ஜோர்தானிய மன்னர் அப்துல்லா.
இதே கருத்தை உலக நாடுகளும் கொண்டுள்ளன. இஸ்ரேல் பதிலடித் தாக்குதல் நடத்தினால் மத்திய கிழக்கில் வன்முறை தலைவிரித்தாடும் என்ற கவலை மேலோங்கி இருக்கிறது.
எனவே, இஸ்ரேல் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று உலக நாடுகள் கேட்டுக்கொண்டுள்ளன.
இதற்கிடையே, ஈரானுக்கு எதிராகத் தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் நிறுவனத்துக்கு இஸ்ரேல் அழைப்பு விடுத்துள்ளது.
நிலைமை கட்டுக்கடங்காமல் போவதற்கு முன்பு ஈரானுக்கு எதிராகத் தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் ஈரானின் செயல்களுக்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் ஐநாவுக்கான இஸ்ரேலியத் தூதர் திரு கிலாட் எர்டான் கேட்டுக்கொண்டார்.