கோலாலம்பூர்: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று (ஏப்ரல் 14) துப்பாக்கிச்சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவரின் மனைவிக்குப் பாதுகாப்பு ஆணை பிறப்பிக்கப்படவில்லை.
விசாரணையில் அந்நடவடிக்கைக்கு அவசியம் இல்லை என்று தெரியவந்தது அதற்குக் காரணம் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். சந்தேக நபர் அவரின் மனைவியைச் சுடும் நோக்கில்தான் தாக்குதலை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
“குடும்ப வன்முறை சம்பந்தப்பட்ட ஒவ்வொரு விசாரணையிலும் பல்வேறு கட்டங்களும் நடைமுறைகளும் இருக்கும். போதுமான வாக்குமூலங்களைப் பெற்ற பிறகுதான் தற்காலிக ஆணை போன்றவற்றைப் பிறப்பிக்க முடியும். குற்றவியல் சட்டப் பிரிவு 506க்குக்கீழ் வரும் விவகாரங்களில் எங்களால் எளிதில் தற்காலிக ஆணை எதையும் வழங்கித் தர முடியாது,” என்று சிலாங்கூர் காவல்துறைத் தலைவரான ஹுசைன் ஒமார் கான் கூறினார்.
இதற்கிடையே, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் முனையம் ஒன்றில் தாக்குதல் நடந்தபோது பல வழிப்போக்கர்கள் இருந்ததால் அவர்கள் யாருக்கும் காயம்படாமல் இருக்கவும் உயிரிழப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும் காவல்துறையினர் சந்தேக நபருடன் துப்பாக்கிக்சூட்டில் ஈடுபடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நிகழ்ந்தபோது காவல்துறை உடனடியைாக நடவடிக்கை எடுக்காததற்கான காரணத்தை பலர் கேட்டதாக திரு ஹுசைன் ஒமார் கான் சொன்னார்.
“சந்தேக நபருடன் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டிருந்தால் நிலைமை மேலும் மோசமடைந்திருக்கக்கூடும். அது, சிறுவர்கள் உட்பட மக்கள் பலர் இருந்த பொது இடமாகும்,” என்று அவர் குறிப்பிட்டார்.