ரோம்: இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து, ஜி-7 நாடுகள் இஸ்ரேலுக்கு அவற்றின் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளன.
ஈரான் நடத்திய தாக்குதலுக்கு அவை கடும் கண்டனம் தெரிவித்தன.
ஏப்ரல் 13ஆம் தேதியன்று இஸ்ரேலை நோக்கி ஈரான் 300க்கும் மேற்பட்ட ஆளில்லா வானூர்திகளை அனுப்பியதுடன் ஏவுகணைகளையும் பாய்ச்சியது. இருப்பினும் அவற்றில் பெரும்பாலான ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
மத்திய கிழக்கை மேலும் நிலைகுலையச் செய்யும் நடவடிக்கைகளில் ஈரான் இறங்கியிருப்பதாகவும் இப்பிரச்சினையை எதிர்கொள்ள கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கத் தயாராக இருப்பதாகவும் ஜி-7 நாடுகள் தெரிவித்துள்ளன.
ஈரானும் அதன் ஆதரவின்கீழ் செயல்படும் அமைப்புகளும் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அவை கூறின.
மத்தியக் கிழக்கில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடிநிலையை முடிவுக்குக் கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்படும் என்று ஜி-7 நாடுகள் உறுதி அளித்துள்ளன.
ஜி-7 நாடுகளில் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி, கனடா ஆகியவை அடங்கும்.
இதற்கிடையே, பதிலடி கொடுக்கும் நோக்குடன் வன்முறையில் இறங்குவது அனைத்துலகச் சட்டத்தின்கீழ் தடை செய்யப்பட்டுள்ளதை ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் நினைவூட்டியுள்ளார்.
ஈரான் மீது இஸ்ரேல் எந்த நேரத்திலும் பதிலடித் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
அவ்வாறு நிகழ்ந்தால் போரால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மத்தியகிழக்கு நிலை குலைந்துவிடும் என்று உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.
ஈரான் மீது பதிலடித் தாக்குதல் நடத்தி, நிலைமையை மேலும் மோசடையச் செய்ய வேண்டாம் என்று பிரான்ஸ் அதிபர் இமானுவல் மெக்ரோனும் பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் டேவிட் கெமேரனும் இஸ்ரேலைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
2023 அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் தாக்கியதைத் தொடர்ந்து இஸ்ரேல்-ஹமாஸ் போர் வெடித்தது. போர் நிகழும் காஸாவில் இதுவரை 33,729 பேர் கொல்லப்பட்டதாகவும் அவர்களில் பெண்களும் குழந்தைகளும் அதிகமாக பலியானதாகவும் ஹமாஸ் வழிநடத்தும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
ஆயினும், அந்தப் போரில் 1,170 பேர் மட்டுமே உயிரிழந்ததாகவும் அவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் என்றும் இஸ்ரேல் கூறி வருகிறது.
இஸ்ரேல் மீது ஈரான் திடீர்த் தாக்குதல் நடத்தி வருவதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் கொந்தளிப்பு கூடியுள்ளது.