ஜகார்த்தா: இந்தோனீசியாவின் மத்தியப் பகுதியில் நிகழ்ந்த நிலச்சரிவில் குறைந்தது 19 பேர் மாண்டுவிட்டனர் என்று உள்ளூர் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமையன்று (ஏப்ரல் 14) தெரிவித்தனர்.
தெற்கு சுலாவேசி மாநிலத்தின் டானா டொராஜா வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் சனிக்கிழமை (ஏப்ரல் 13) மாலை பல சடலங்கள் அகற்றப்பட்டதாகவும் இருவர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் உள்ளூர் பேரிடர் அமைப்பின் தலைவரான சுலைமான் மாலியா கூறினார்.
“19 பேர் மாண்டுவிட்டனர். தெற்கு மக்காலேயில் நால்வரும் மக்காலேயில் உள்ள மற்ற கிராமங்களில் 15 பேரும் உயிரிழந்தனர்,” என்று அவர் ஞாயிற்றுக்கிழமையன்று ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
“பாதிக்கப்பட்ட மற்றவர்களைத் தேடும் பணிகளில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்,” என்றார் அவர். இருவரைக் காணவில்லை என்றும் அவர் சொன்னார். வீடுகளை விழுங்கிய இடிபாடுகளில் அவர்கள் சிக்கியிருப்பர் எனக் கருதப்படுவதாக திரு மாலியா குறிப்பிட்டார்.
டானா டொராஜாவும் அதன் சுற்று வட்டாரங்களும் தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கடந்த வாரம் பாதிப்பு அதிகம் இருந்ததாக திரு மாலியா தெரிவித்தார்.