சிட்னி: சிட்னியில் உள்ள தேவாலயத்தில் ஏப்ரல் 15ஆம் தேதியன்று கத்திக்குத்துச் சம்பவம் நிகழ்ந்தது. இதில் தேவாலயத்தின் பேராயர் உட்பட குறைந்தது நான்கு பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தோரின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரார்த்தனைக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது பதின்மவயது ஆடவர் ஒருவர் கத்தியைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தினார்.
சமூக ஊடகத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துகொண்டோர் தாக்குதலைப் பார்த்து அதிர்ந்தனர்.
தாக்குதல் நடத்திய இளைஞர் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டார்.
இந்தத் தாக்குதலை ஆஸ்திரேலியக் காவல்துறை பயங்கரவாதச் சம்பவம் என வகைப்படுத்தியுள்ளது. சமய தீவிரவாதம் காரணமாக அந்த இளைஞர் இத்தாக்குதலை நடத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
அந்த இளைஞர் தாக்குதல் நடத்தும் நோக்குடன் கத்தியைத் தேவாலயத்துக்குக் கொண்டு சென்றதைக் காவல்துறையினர் சுட்டினர்.
தாக்குதலுக்குப் பிறகு தேவாலயத்துக்கு வெளியே காவல்துறை அதிகாரிகளுக்கும் பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துகொண்டோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
தாக்குதல் நடத்திய இளைஞரைத் தங்களிடம் ஒப்படைக்கும்படி காவல்துறையினரை அவர்கள் வற்புறுத்தினர்.
இந்த மோதல் காரணமாக பலருக்குக் காயம் ஏற்பட்டது.
தேவாலயத்துக்கு வெளியே கிட்டத்தட்ட 30 பேருக்கு அவசரகாலப் பிரிவு அதிகாரிகள் முதலுதவி வழங்கினர். காயம் அடைந்தோரில் ஏழு பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துகொண்டோருடன் கைகலப்பு ஏற்பட்டதில் காவல்துறை அதிகாரிகள் பலர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஏறத்தாழ 20 காவல்துறை வாகனங்கள் சேதமடைந்தன.