பெட்டாலிங் ஜெயா: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் ஏப்ரல் 14ஆம் தேதியன்று துப்பாக்கிச்சூடு நடத்தியவர் எனச் சந்தேகிக்கப்படும் 38 வயது ஹஃபிசுல் ஹராவியை ஏழு நாள்களுக்கு விசாரணைக் காவலில் வைத்திருக்க கிளந்தான் மாநில கோத்தா பாரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மலேசியக் காவல்துறையின் விண்ணப்பத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
ஹஃபிசுலிடம் அதிகாரிகள் விசாரணை நடத்த ஏதுவாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 16ஆம் தேதி காலை 8.30 மணிக்கு ஹஃபிசுல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
ஹஃபிசுல், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் தமது மனைவியைத் துப்பாக்கியால் சுட முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அவரது மனைவியான திருவாட்டி ஃபாரா முகம்மது இஸாவின் மெய்க்காப்பாளரது வயிற்றில் குண்டு பாய்ந்தது.
இதையடுத்து, ஹஃபிசுல் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
அவரை அதிதாரிகள் நாடெங்கும் வலைவீசித் தேடினர்.
கிட்டத்தட்ட 24 மணி நேரம் கழித்து அவர் கோத்தா பாருவில் கைது செய்யப்பட்டார்.
காயமடைந்த மெய்க்காப்பாளர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.