கோலாலம்பூர்: தங்கத்தின் விலை அண்மைய வாரங்களில் மிகவும் அதிகரித்திருப்பதால் மலேசியர்கள் பலரும் நகை வாங்கும் திட்டத்தைக் கைவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியர்கள், சீனர்கள் என இரு இனத்தவரும் திருமணம் போன்ற மங்கல நிகழ்ச்சிகளுக்கு உகந்த காலமாகக் கருதும் காலகட்டம் இது என்பதால் தங்கத்தின் விலை உயர்வு பலரையும் பாதித்துள்ளது.
இனி நகைக்குப் பதில் ரொக்கமாக அன்பளிப்புத் தர முடிவெடுத்துள்ளதாகக் கூறினார் திருவாட்டி தேவி, 57.
கலாசார ரீதியாக, மலேசியாவில் வசிக்கும் மலாய்க்காரர்களும் இந்தியர்களும் திருமணம், பிறந்தநாள், குழந்தைப் பிறப்பு உள்ளிட்ட கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்குத் தங்கம் வாங்குவர்.
தென்னிந்திய வம்சாவளியினருக்கு சித்திரை மாதம் திருமணங்கள் நடத்த ஏற்ற பருவம்.
சீனர்களும் ஏப்ரல் 4ஆம் தேதி நடைபெற்ற சின் மிங் விழாவிற்குப் பிறகு திருமண நிகழ்ச்சிகளை நடத்த விரும்புவது வழக்கம்.
ஜாலான் மஸ்ஜித் இந்தியா வட்டார நகைக் கடைகளில் கூடும் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் நகைகளைப் பார்ப்பதோடு நிறுத்திவிடுவதாகவும் அதிகமானோர் வாங்கவில்லை என்றும் கடைக்காரர்கள் கூறியதாக மலேசிய ஊடகங்கள் கூறின.
ஆனால் கையில் காசு இருந்தால், ஒரு முதலீடாகக் கருதித் தங்கம் வாங்கலாம் என்கிறார் திருவாட்டி தனலட்சுமி சுகுமாறன், 36. நிதிச் சிக்கல் ஏற்பட்டால், வாங்கிய தங்கத்தை விற்று அதைச் சமாளிக்கலாம் என்கிறார் இவர்.
தனது திருமணத்தை முன்னிட்டுத் தங்கம் வாங்கச் சென்ற ஃபௌஸி பைலஸ், 44, விலை உயர்வால் அடிப்படையான சில நகைகள் மட்டுமே போதும் என முடிவெடுத்திருப்பதாகக் கூறினார்.
சகோதரரின் நிச்சயதார்த்தம், திருமணம் ஆகியவற்றுக்கு தங்கம் வாங்க ஒதுக்கிய தொகையில் இப்போது குறைந்த அளவே நகை வாங்க முடியும் என்று கவலை தெரிவித்தார் செல்வராணி லோகநாதன், 42.
நகைகள் வாங்கும்போது தங்கத்தின் விலை மட்டுமன்றி கூலி, சேதாரம் ஆகியவையும் சேரும் என்பதை அவர் சுட்டினர்.