சோல்: வடகொரியாமீது விதிக்கப்பட்டிருக்கும் பொருளியல் தடைகளைக் கண்காணிக்கப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய புதிய குழு ஒன்றை நியமிக்க அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளதாகப் புதன்கிழமை தகவல்கள் தெரிவித்தன.
கடந்த 15 ஆண்டுகளாக வட கொரியாவின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அந்நாட்டின்மீது பொருளியல் தடைகள் விதிக்கப்பட்டன. அதன் செயல்பாடுகளைக் கண்காணிக்க நிபுணர் குழு ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை அமைத்தது.
அக்குழுவின் வருடாந்திர புதுப்பிப்பை ரஷ்யா நிராகரித்ததையடுத்து ஐக்கிய நாடுகள் சபைக்கு வெளியே நிபுணர் குழுவை அமைக்க அச்சபையில் உறுப்பினர்களாக இருக்கும் மற்ற நாடுகள் வலியுறுத்துவதாகக் கூறப்படுகிறது. இந்த வாக்கெடுப்பில் சீனா கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பொருளியல் தடைகளின் செயல்பாட்டைக் கண்காணிப்பதில் இதுவரை ஐக்கிய நாடுகள் சபை செய்துவந்த பணியைத் தொடர்ந்து மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டு இப்புதிய குழு உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இப்புதிய குழுவின் செயல்பாடுகளை அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் கண்காணிக்கும் என்றும் ஒத்தக் கருத்து கொண்ட நாடுகளான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளும் சில ஐரோப்பிய நாடுகளும் இக்குழுவில் இணைந்துள்ளன என்றும் தகவல்கள் கூறின.
“ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர்களான சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் வட கொரியாமீது விதிக்கப்பட்டிருக்கும் பொருளியல் தடைகளைச் சந்தேகத்திற்குரிய வகையில் தளர்த்த முயற்சித்ததால் ஐக்கிய நாடுகள் சபையில் குழு சில சிரமங்களை எதிர்கொண்டது,” என்று தென் கொரிய அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
“அத்தகைய குழு, ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவு பெற்ற நடவடிக்கைக்கு ஈடான அங்கீகாரத்தைப் பெற்றிருக்காது என்றாலும், வட கொரியாவை மிகவும் திறம்படக் கண்காணிக்க முடியும்,” என்றார் அவர்.