சிட்னி: சிட்னியில் உள்ள தேவாலயத்தில் ஏப்ரல் 15ஆம் தேதியன்று கத்திக்குத்துச் சம்பவம் நிகழ்ந்தது. இதில் தேவாலயத்தின் பேராயர் உட்பட குறைந்தது நான்கு பேர் காயமடைந்தனர்.
அந்தத் தாக்குதலை நடத்திய 16 வயது இளையர்மீது ஏப்ரல் 19ஆம் தேதி பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாக ஆஸ்திரேலிய காவல்துறை தெரிவித்தது.
தற்போது அந்த இளையரிடம் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளையர் தேவாலயத்தில் தாக்குதல் நடத்தியபோது அவருக்கும் காயம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் சிகிச்சைபெற்று உடல்நலம் தேறிவருவதாக அதிகாரிகள் கூறினர்.
அவருக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்தத் தாக்குதலை ஆஸ்திரேலியக் காவல்துறை பயங்கரவாதச் சம்பவம் என வகைப்படுத்தியுள்ளது. சமய தீவிரவாதம் காரணமாக அந்த இளைஞர் இத்தாக்குதலை நடத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
இளையர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.