கோலாலம்பூர்: மலேசியாவின் பொருளியல் வளர்ச்சி ஓராண்டு காலத்தில் காணாத அளவில் அதிகமாகப் பதிவானது.
ஆண்டு அடிப்படையில் இவ்வாண்டு முதல் காலாண்டில் மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.9 விழுக்காடு வளர்ச்சியடைந்தது. அந்நாட்டின் புள்ளி விவரப் பிரிவு வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 19) இத்தகவலை வெளியிட்டது.
புளூம்பர்க் செய்தி நிறுவனம் நடத்திய கருத்தாய்வின் சராசரிக் கணிப்புக்கு ஏற்றவாறு அந்த விகிதம் பதிவானது.
மலேசிய சேவைத் துறை அந்நாட்டுப் பொருளியல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது எனப் புள்ளி விவரப் பிரிவு குறிப்பிட்டது. அதோடு, காலாண்டு அடிப்படையில் உற்பத்தித் துறை 1.9 விழுக்காடு வளர்ச்சிகண்டது என்றும் தெரிவிக்கப்பட்டது. முந்தைய காலாண்டில் அத்துறை சுருங்கியது.
மலேசியா, இறக்குமதி செய்ததைவிட அதிகம் ஏற்றுமதி செய்தது. அந்த வகையில் மார்ச் மாதம் கூடுதலாக 12.8 பில்லியன் ரிங்கிட் (3.6 பில்லியன் வெள்ளி) மதிப்பிலான ஏற்றுமதிகள் இடம்பெற்றன. அது, கவனிப்பாளர்களின் கணிப்பைவிட அதிகமாகும்.
சென்ற ஆண்டு உலகளவில் தேவை குறைந்து காணப்பட்டது. அதனால் மலேசியப் பொருளியல் பாதிக்கப்பட்டது.
இப்போது வெளியிடப்பட்டுள்ள புள்ளி விவரங்களில் அந்நாட்டுப் பொருளியல் மீண்டு வருவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக நம்பப்படுகிறது.
சீனாவின் பொருளியல் இவ்வாண்டு தொடக்கத்தில் எதிர்பாரா விதமாக வலுவாகக் காணப்பட்டது. அதன் மூலம் மலேசியா பலனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனா, மலேசியாவின் ஆகப் பெரிய வர்த்தகப் பங்காளியாகும்.