ஜெனிவா: மலேசிய அரசாங்கத்துக்குச் சொந்தமான 1எம்டிபி நிதியிலிருந்து 1.8 பில்லியன் டாலர் (2.5 பில்லியன் வெள்ளி) தொகையைப் பறித்ததாக சந்தேகிக்கப்படும் ஆடவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்குமாறு சுவிட்சர்லாந்து அரசு வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட அவ்விருவரின் வழக்கறிஞர்கள் வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 18) தங்கள் வாதத்தை முன்வைத்தனர்.
பெட்ரோசவூதி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தாரெக் ஒபாய்ட், இயக்குநரான பேட்ரிக் மஹோனி ஆகியோர் மீது சுவிட்சர்லாந்தின் பெல்லின்ஸோனா நகரில் உள்ள மத்திய குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவ்விருவரும், முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கின் ஆலோசகராக இருந்த ஜோ லோவின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட நிதிக் கொள்ளையில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.
ஒபாய்டுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்குமாறும் அவருக்குப் பக்கபலமாக இருந்த மஹோனிக்கு ஒன்பது ஆண்டு சிறைத் தண்டனை விதிக்குமாறும் ஆலிஸ் டி சேம்பிரியர் எனும் வழக்கறிஞர் புதன்கிழமையன்று (ஏப்ரல் 17) கேட்டுக்கொண்டார்.
ஒபாய்ட், சுவிட்சர்லாந்து, சவூதி அரேபியா என இருநாட்டுக் குடியுரிமையையும் வைத்துள்ளார். அதேபோல் மஹோனி, சுவிட்சர்லாந்து, பிரிட்டிஷ் குடியுரிமைகளை வைத்துள்ளார்.