கியவ்: உக்ரேனின் நிப்ரோபெட்ரொவ்ஸ்க் வட்டாரத்தில் ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில் எட்டுப் பேர் மாண்டனர்.
மேலும் 21 பேர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்பில் பலத்த சேதம் ஏற்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) தெரிவித்தனர்.
தாக்குதலில் அவ்வட்டாரத் தலைநகர் நிப்ரோவின் ரயில் நிலையமும் அங்குள்ள குடியிருப்புக் கட்டடமும் சேதமடைந்ததாக உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கூறினார்.
“அதன் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ரஷ்யா பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். ஒவ்வோர் ஏவுகணையும் சுட்டு வீழ்த்தப்பட வேண்டும்,” என்றார் அவர்.
வட்டார உள்கட்டமைப்பைக் குறிவைத்து ரஷ்யா வேண்டுமென்றே தாக்குதல் நடத்துவதாக உக்ரேனிய அரசாங்கத்துக்குச் சொந்தமான ரயில் நிறுவனம் கூறியது.
நிப்ரோ ரயில் நிலையம் மூடப்பட்டதாகவும் அந்நகரின் வழியாகச் செல்லவேண்டிய ரயில்கள் வேறு பாதையில் மாற்றிவிடப்பட்டதாகவும் அது குறிப்பிட்டது.
இவ்வேளையில், உக்ரேனில் ஆயுதங்கள், ராணுவத் தளவாடங்களைத் தயாரிக்கும் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள், புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன என்று தகவல்கள் கூறுகின்றன.
இருப்பினும் அவற்றில் சில நிதிப் பற்றாக்குறையால் திணறி வருவதாகக் கூறப்படுகிறது.
ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலுக்கு இலக்காக நேரிடலாம் என்ற அச்சம் அவற்றுக்கு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அரசாங்கம் அதன் ஆயுதக் கொள்முதல் கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அவை வலியுறுத்தியுள்ளன.
தங்கள் தயாரிப்புகள் அனைத்தையும் அரசாங்கமே வாங்க முடியாது என்பதால் ஏற்றுமதி செய்யத் தங்களை அனுமதிக்க வேண்டும் என்று அவை கோருகின்றன.
இந்நிலையில், ரஷ்யாவைச் சேர்ந்த எண்ணெய், எரிவாயு நிறுவனமான பேஷ்நெஃப்ட் அதன் சுத்திகரிப்பு நிலையங்களில் உள்ள முக்கிய வசதிகளை ஆளில்லா வானூர்திகளைத் தடுக்கும் வலைகளை நிறுவிப் பாதுகாத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
ரஷ்யத் தற்காப்பு அமைச்சுடன் இதன் தொடர்பில் அந்நிறுவனம் கலந்துபேசியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய ஊடகங்கள், வெள்ளிக்கிழமை இந்தத் தகவலை வெளியிட்டன.
மாஸ்கோவின் ராணுவத் திறன்களைக் குறைக்கும் நோக்கில், இவ்வாண்டு (2024) தொடக்கம் முதல் ரஷ்யாவின் எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையங்கள்மேல் உக்ரேன் அதிக அளவில் தாக்குதல் நடத்திவருகிறது.