மெம்ஃபிஸ்: அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் உள்ள மெம்ஃபிஸ் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது இருவர் மாண்டவதாகவும் அறுவர் காயமுற்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குடியிருப்புப் பகுதிவாசிகளுக்கிடையே சனிக்கிழமையன்று (ஏப்ரல் 20) நடைபெற்ற கொண்டாட்டத்தில் அச்சம்பவம் நிகழ்ந்ததாகக் காவல்துறை கூறியது.
“சம்பவத்துக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் எட்டு பேர் பாதிக்கப்பட்டதும் அவர்களில் இருவர் சம்பவ இடத்தில் மாண்டதும் தெரியவந்தது,” என்று மெம்ஃபிஸ் காவல்துறை எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது. சம்பவத்தில் 16 பேர் சுடப்பட்டதாக அந்த அறிக்கையில் முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
காயமடைந்த ஒருவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மற்றொருவர் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியதாகவும் காவல்துறை சொன்னது.
“இது, குடியிருப்புப் பகுதிவாசிகளுக்கிடையே அனுமதியின்றி ஏற்பாடு செய்யப்பட்ட கொண்டாட்டமாகும்,” என்றும் காவல்துறையினர் குறிப்பிட்டனர். கொண்டாட்டத்தில் 200லிருந்து 300 பேர் கலந்துகொண்டனர்.
சந்தேக நபர்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ள குறைந்தது இருவர் தேடப்பட்டு வருவதாக சிபிஎஸ் செய்தி நிறுவனம் கூறியது. மெம்ஃபிஸ் காவல்துறையின் இடைக்காலத் தலைவர் செரெலின் டேவிஸ் அவ்வாறு சொன்னதாக சிபிஎஸ் தெரிவித்தது.
“சம்பவத்தில் குறைந்தது இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினர் என்பதை நாங்கள் அறிகிறோம்,” என்று டேவிஸ், சிபிஎஸ்ஸிடம் சொன்னார்.
இதுகுறித்து கூடுதல் தகவல் சேகரிக்க மெம்ஃபிஸ் காவல்துறையைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.