ஷா ஆலம்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், மலேசியாவுக்கான தனது சீர்திருத்தங்களை சமரசம் செய்துகொண்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கும் பொருளியல் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கும் தனது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
சிலாங்கூர், ஷா ஆலமில் நடைபெற்ற கெஅடிலான் கட்சியின் 25வது மாநாட்டில் உரையாற்றிய அவர், அனைத்து மலேசியர்களுக்கும் இனம் பேதமின்று தொடர்ந்து உதவுவதாக உறுதியளித்தார்.
தனது நிர்வாகத்தால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் நாட்டிற்கு பில்லியன் கணக்கான ரிங்கிட்டை சேமிக்கும் என்றும் குறிப்பிட்டார்.
ஆட்சிக்கு வந்து பதினேழு மாதங்கள் ஆனநிலையில், பிகேஆர் கட்சி அதன் சீர்திருத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும் பேச்சுரிமையை முடக்கி வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது.
ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள கட்சிகளுக்கு இடையிலான உறவு தற்போது வலுவாகவும் நிலையானதாகவும் இருப்பதோடு, ஒவ்வொரு கட்சியும் அதனை நிலைநாட்டியும் வருவதாகவும் அவர் சொன்னார்.
பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ள நிலையில், அதனை விவாதிப்பதில் அமைச்சரவை உறுப்பினர்களின் மத்தியில் புரிந்துணர்வு சிக்கல்கள் இல்லை என்றார் அவர்.
ஒற்றுமை அரசாங்கம் இன்னும் வலுவாகவும் நிலையாகவும் இருக்கிறது என்று அன்வார் உறுதியுடன் தெரிவித்தார்.
மேலும், கோலா குபு பாருவில் போட்டியிடும் ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளரின் வெற்றிக்கு மஇகா உதவும். அத்தேர்தலை மஇகா புறக்கணிக்கும் என்ற தகவலில் எந்த உண்மையும் இல்லை என்றும் அன்வார் குறிப்பிட்டார்.
கோலா குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல் மே 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தனக்கு ஆதரவு அளித்தால் மட்டுமே தொகுதிகளுக்குத் தேவையான நிதி வழங்கப்படும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நிபந்தனை விதிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கூறுவது உண்மையல்ல என்றும் அன்வார் தெரிவித்தார்.
கெஅடிலான் கட்சியில் உறுப்பினர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு கண்டு வருகிறது. இவ்வாண்டு மார்ச் மாதம் 21ஆம் தேதி வரை அக்கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 1,153,212 ஆகப் பதிவாகியுள்ளது என்றும் கூறப்பட்டது.