மே சொட் (தாய்லாந்து): மியன்மாரையும் தாய்லாந்தையும் இணைக்கும் பாலம் அருகே மியன்மார் ராணுவத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. அதனைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான மியன்மார் நாட்டைச் சேர்ந்த மக்கள் சனிக்கிழமை (ஏப்ரல் 20) அன்று மேற்கு தாய்லாந்திற்குத் தப்பியோடினர்.
தாய்லாந்துக்கும் மியன்மாருக்கும் இடையே இருக்கும் நட்பைப் பறைசாற்றும் விதமாகக் கட்டப்பட்ட இப்பாலம் மியன்மாரின் தாய்லாந்து எல்லையான மியாவடி பகுதியையும் தாய்லாந்தின் மியன்மார் எல்லையான மே சொட் நகரத்தையும் இணைக்கிறது.
எல்லைப் பகுதியில் உள்ள மியன்மாரின் மியாவடி நகரம் அந்நாட்டு ராணுவத்துக்கு எதிராக இயங்கும் கேரன் தேசிய ஒன்றியம் போன்ற அந்நாட்டு கிளர்ச்சியாளர்களின் வசம் சென்றது. இதனால் அப்பகுதியில் மியன்மார் ராணுவத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே ஒரு வாரத்திற்கும் மேலாகச் சண்டை நடந்து வருகிறது.
உத்திபூர்வ காரணங்களுக்காக முக்கியமானதாகக் கருதப்படும் மியன்வாடி நகரை இழந்ததால் எல்லை வர்த்தகத்திலிருந்து மியன்மாரின் ராணுவ அரசாங்கம் ஈட்டும் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் $1 பில்லியன் அமெரிக்க வெள்ளி (S$1.36 பில்லியன்) வர்த்தகம் நடந்த மியன்மாரின் முக்கிய வர்த்தக மையமாக மியன்வாடி நகரம் திகழ்கிறது.