ஜகார்த்தா: இந்தோனீசியாவில் உள்ள எரிமலையில் ஏறி படமெடுத்துக்கொள்ளத் தம்மைத் தயார்ப்படுத்திக்கொண்டிருந்தபோது சீன சுற்றுப்பயணி ஒருவர் உயரத்திலிருந்து விழுந்து மாண்டார்.
31 வயது திருவாட்டி ஹுவாங் லியோங்கும் அவரது கணவரான 32 வயது திரு சாங் யோங்கும் சுற்றுலா வழிகாட்டியுடன் கிழக்கு ஜாவாவில் உள்ள இஜென் எனும் எரிமலை சுற்றுப்பயணப் பூங்காவிற்குச் சென்றிருந்தனர்.
சூரியோதயத்தைக் காண அவர்கள் இருவரும் எரிமலையில் ஏறினர்.
அவர்கள் இருவரும் எரிமலை வாய் வரை சென்றனர்.
அவ்வாறு செல்வது அபாயகரமானது என்று அத்தம்பதியரிடம் தாம் எச்சரிக்கை விடுத்ததாக அவர்களது சுற்றுலா வழிகாட்டி கூறினார்.
எரிமலையில் தாம் இருப்பதைக் காட்டும் வகையில் படங்களை எடுத்துக்கொள்ள திருவாட்டி ஹுவாங் எரிமலை முனையை நோக்கிச் சென்றதாக அறியப்படுகிறது. அவர் பின்னோக்கி நடந்துகொண்டிருந்தபோது அவரது கால் அவர் அணிந்திருந்த ஆடையில் அகப்பட்டதை அடுத்து, கால் தடுக்கி உயரத்திலிருந்து விழுந்து மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.