ஜகார்த்தா: அண்மையில் இந்தோனீசியாவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் பிரபோவோ சுபியாந்தோ வெற்றி பெற்றார்.
தேர்தலில் மோசடி செய்துதான் பிரபோவோ வெற்றி பெற்றார் என்று அதிபர் தேர்தலில் களமிறங்கிய மற்ற வேட்பாளர்கள் அரசியலமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர்.
மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்நிலையில் வழக்கை விசாரத்த நீதிபதிகள் தேர்தலில் எந்த ஒரு மோசடிகளும் இடம்பெறவில்லை என்று கூறி ஏப்ரல் 22ஆம் தேதி பிரபோவோவின் வெற்றியை உறுதி செய்து தீர்ப்பளித்தனர்.
பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தல் வாக்களிப்பில் திரு பிரபோவோவும் அவரது துணை வேட்பாளர் ஜிப்ரான் ரக்காபுமிங் ரக்காவும் 58.59 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக 96,214,691 வாக்குகள் பதிவாயின.
அவர்களை எதிர்த்துப் போட்டியிட்ட திரு அனீஸ் பஸ்வேடன்-முகைமின் இஸ்கந்தர் தரப்பு 24.95 விழுக்காட்டு வாக்குகளையும் திரு கஞ்சார் பிரனோவோ-மஹ்ஃபுட் முகமது தரப்பு 16.74 விழுக்காட்டு வாக்குகளையும் பெற்றனர்.