பெட்டாலிங் ஜெயா: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் மீது ஏப்ரல் 24ஆம் தேதி காலை கோத்தா பாரு நீதிமன்றத்தில் ஏழு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
ஆயுதங்கள் வைத்திருந்ததாக 38 வயது ஹஃபிசுல் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அதுமட்டுமல்லாது, சாலைப் போக்குவரத்துச் சட்டம், தேசியப் பதிவகச் சட்டம் ஆகியவற்றின்கீழ் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஹஃபிசுல் மறுத்து விசாரணை கோரியுள்ளார்.
ஏப்ரல் 14ஆம் தேதி அதிகாலை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்த தமது மனைவியான திருவாட்டி ஃபாரா முகம்மது இஸாவை நோக்கி ஹஃபிசுல் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால் குறி தவறி திருவாட்டி ஃபாராவின் மெய்க்காப்பாளரின் வயிற்றில் தோட்டா பாய்ந்தது.
அங்கிருந்து தப்பிச் சென்ற ஹஃபிசுல் கிட்டத்தட்ட 38 மணி நேரம் கழித்து கிளந்தான் மாநிலத் தலைநகர் கோத்தா பாருவில் கைது செய்யப்பட்டார்.
படுகாயம் அடைந்த மெய்க்காப்பாளருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அண்மையில் அவருக்குச் சுயநினைவு திரும்பியது.