உலக சுகாதார நிறுவனம்: பதின்ம வயதினரிடையே மதுபான, மின்சிகரெட் பழக்கம் அதிர்ச்சி தருகிறது

உலக சுகாதார நிறுவனம்: பதின்ம வயதினரிடையே மதுபான, மின்சிகரெட் பழக்கம் அதிர்ச்சி தருகிறது

2 mins read
6ad5a822-8057-4fc2-a604-38b934cf56a4
நிலைமையைக் கையாள நடவடிக்கை எடுக்குமாறு உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கோப்பன்ஹேகன்: பதின்ம வயதினரிடையே மதுபான, மின்சிகரெட் பழக்கம் அதிகமாக இருப்பது அதிர்ச்சி தரும் வண்ணம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய கிளை வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 25) அந்த அறிக்கையை வெளியிட்டது. மதுபானம், மின்சிகரெட் ஆகியவற்றை எளிதில் பெறமுடிவதைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளும் அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

ஐரோப்பா, மத்திய ஆசியா, கனடா ஆகியவற்றில் வாழும் 11, 13, 15 வயதான 280,000 பதின் வயதினரைக் கொண்டு கருத்தாய்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகளை வைத்து அறிக்கை வரையப்பட்டது.

பதின்ம வயதினரிடையே காணப்படும் மதுபான, மின்சிகரெட் பழக்கம் கவலை தரும் வகையில் அமைந்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டது.

“இத்தகைய போக்குகளால் நீண்டகாலத்தில் ஏற்படக்கூடிய விளைவுகள் குறிப்பிடத்தக்கவையாகும். அதிர்ச்சி தரும் இந்தப் புள்ளி விவரங்களை அரசியல் தலைவர்கள் கருத்தில்கொள்ளாமல் இருப்பது அறவே நல்லதன்று,” என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தது.

15 வயதான இளையர்களில் 57 விழுக்காட்டினர் குறைந்தது ஒருமுறையாவது மதுபானம் அருந்தியிருப்பதாகக் கருத்தாய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களை மட்டும் கருத்தில்கொள்ளும்போது அந்த விகிதம் 59 விழுக்காடாகப் பதிவானது. ஆண்களுக்கான விகிதம் 56 விழுக்காடாகும்.

பொதுவாக ஆண்களிடையே மதுப் பழக்கம் குறைந்திருப்பதாகவும் பெண்களிடையே அதிகரித்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டது.

11 வயது ஆண்களில் எட்டு விழுக்காட்டினர் கருத்தாய்வுக்கு முந்தைய 30 நாள்களில் ஒருமுறையாவது மதுபானம் அருந்தியதாகத் தெரிவித்தனர். பெண்களில் இந்த விகிதம் ஐந்து விழுக்காடாகும்.

எனினும், 15 வயதை அடைவதற்குள் பெண்களிடையே இந்த விகிதம் ஆண்களைவிட அதிகம். கருத்தாய்வுக்கு முந்தைய 30 நாள்களில் 38 விழுக்காட்டுப் பெண்கள் குறைந்தது ஒருமுறையாவது மதுபானம் அருந்தியதாகக் கூறினர். ஆண்களில் இந்த விகிதம் 36 விழுக்காடாகும்.

பதின்ம வயதினரிடையே மின்சிகரெட் பயன்பாடு அதிகரித்துள்ளதையும் அறிக்கை சுட்டியது.

2022ஆம் ஆண்டில் 11லிருந்து 15 வயதுக்கு உட்பட்ட பதின்ம வயதினரில் 13 விழுக்காட்டினர் புகைபிடித்தனர். நான்காண்டுகளுக்கு முன்பு பதிவான விகிதத்தைக் காட்டிலும் இது இரண்டு விழுக்காடு குறைவாகும்.

எனினும், பதின்ம வயதினரிடையே சிகரெட்டைக் காட்டிலும் மின்சிகரெட் பயன்பாடு அதிகரித்துள்ளது. 15 வயது இளையர்களில் 32 விழுக்காட்டினர் மின்சிகரெட்டைப் புகைத்திருக்கின்றனர். 20 விழுக்காட்டினர் கருத்தாய்வுக்கு முந்தைய 30 நாள்களில் குறைந்தது ஒருமுறையாவது மின்சிகரெட்டைப் புகைத்தனர்.

நிலைமையைக் கையாள மதுபானம், மின்சிகரெட் உள்ளிட்டவற்றுக்குக் கூடுதல் வரி விதிப்பது, அவற்றின் விளம்பரங்கள் போன்றவற்றுக்குக் கட்டுப்பாடுகளை விதிப்பது ஆகிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐரோப்பிய வட்டாரத்துக்கான உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் ஹான்ஸ் குலூக அறிக்கை ஒன்றில் பரிந்துரைத்தார்.

குறிப்புச் சொற்கள்
மின்சிகரெட்மதுபானம்உலக சுகாதார நிறுவனம்அறிக்கை