வீட்டைப் புதுப்பித்தபோது கிடைத்த 17ஆம் நூற்றாண்டு தங்கப்புதையல்

வீட்டைப் புதுப்பித்தபோது கிடைத்த 17ஆம் நூற்றாண்டு தங்கப்புதையல்

1 mins read
c67691b5-b830-4d7a-a1c0-f567ae7b31a7
தங்கப்புதையதலைப் பெற்ற தம்பதி. - படம்: டுவிட்டர்

தென் இங்கிலாந்தைச் சேர்ந்த தம்பதியர், தங்களின் பண்ணை வீட்டில் உள்ள சமையலறையைப் புதுப்பித்தபோது 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தங்க நாணயங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

பழங்கால இந்தியாவைப் பொறுத்தவரை அந்நிய நாட்டினரின் படையெடுப்புக்கு அஞ்சிய மக்கள் தாங்கள் சேர்த்து வைத்த பொன்னையும் பொருளையும் தங்களின் வருங்காலத்திற்காக பூமியில் புதைத்துவைக்கும் பழக்கத்தை கையாண்டு வந்தனர்.

இதனால் இன்றும் வீடுகளைப் புதுப்பிக்கும்போதும், கிணறு, வேறு நீர் ஆதாரங்களுக்காகப் பூமியை தோண்டும்போதும், முன்னோர்கள் புதைத்து வைத்திருந்த பொருள்கள் கிடைக்கப்பெறுகின்றன.

இதே போல் இங்கிலாந்தில் 17ஆம் நூற்றாண்டில் பூமிக்கு அடியில் தங்கம், வெள்ளிக் காசுகள் புதைக்கப்பட்டு இருந்திருக்கின்றன. அவை இப்போது கிடைத்திருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

தென் இங்கிலாந்தைச் சேர்ந்த ராபர்ட் ஃபூக்ஸ் - பெட்டி தம்பதியினர், தங்கள் 400 ஆண்டுகள் பழமையான வீட்டைப் புதுப்பிக்க எண்ணினர்.

அதற்காக வீட்டின் சமயலறையைத் தோண்டியபோது, ஏதோ ஒரு பொருள் கீழே தட்டுப்பட்டிருந்தது.

நாணயங்களைக் கண்டுபிடித்தவுடன் ஃபூக்ஸ் உடனடியாக உள்ளூர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார். அங்கு சென்ற அதிகாரிகள், அந்தக் கலைப்பொருள்களைப் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திற்கு அடையாளம் காண அனுப்பி வைத்தனர்.

”என் கணவர் வீட்டைப் புதுப்பிக்க நினைத்து வீட்டின் சமையலறையை ஆழப்படுத்தினார். அப்பொழுது இந்த நாணயங்கள் கிடைத்தன. இன்னும் ஏதாவது கிடைக்குமா என்ற ஆவலில் அவர் இன்னும் அவ்விடத்தைவிட்டு வெளிவரவில்லை,” என்று ஃபூக்ஸின் மனைவி கூறினார்.

அந்த நாணயங்களின் மதிப்பு 65,000 டாலர் எனச் சொல்லப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்