ஹைதராபாத்: இந்தியாவில் தயாரிக்கப்படும் எம்டிஎச், எவரெஸ்ட் ஆகியவற்றின் மசாலாப் பொடிகளில் கலந்துள்ள பொருள்களின் விவரங்களை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்டிஏ) சேகரித்து வருகிறது.
அவற்றின் தயாரிப்புகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் பூச்சிக்கொல்லி ரசாயனம் அதிக அளவில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
“நாங்கள் நிலைமையை அறிந்துள்ளோம். கூடுதல் விவரங்களை சேகரித்து வருகிறோம்,” என்று ஏப்ரல் 26ஆம் தேதி ராய்ட்டர்ஸிடம் ‘எஃப்டிஏ’ பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஹாங்காங் ஏப்ரலில் மூன்று எம்டிஎச் தயாரிப்பு மசாலாப் பொருள்களுக்கும் எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலாப் பொருளுக்கும் தடை விதித்தது.
சிங்கப்பூரும் எவரெஸ்ட் மசாலாப் பொருள்களை மீட்டுக் கொள்ள உத்தரவிட்டது. அதில் எத்திலின் ஆக்சைட் அளவுக்கு அதிகமாக கலந்து இருப்பதாகவும் அது புற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது என்றும் சிங்கப்பூர் கூறியிருந்தது.