ஜகார்த்தா: இந்தோனீசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள இபூ எரிமலை வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குப் பின் குமுறியது.
எரிமலையில் இருந்து 3 கிலோமீட்டர் உயரம் வரை அதன் சாம்பல் வானத்தை நோக்கிப் பறந்தது. எரிமலை இருக்கும் வட்டாரத்தில் உள்ள மக்கள் அதன் அருகே செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இபூ எரிமலை வடக்கு மலுக்கு மாநிலத்தில் உள்ள ஹல்மஹெரா தீவில் உள்ளது. இபூ எரிமலை உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 12.37 மணிக்குக் குமுறியது.
எரிமலை மூன்று நிமிடங்களுக்கு மேல் குமுறியதாக அதைக் கண்காணிக்கும் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 28) தகவல் வெளியிட்டனர்.
எரிமலையைச் சுற்றியுள்ள இரண்டு கிலோமீட்டர் சுற்றளவில் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அவ்வட்டாரத்தில் இருந்து மக்கள் வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவிக்கவில்லை. இருப்பினும் வெளியே செல்லும்போது முகக்கவசம், கண்ணாடிகள் அணிந்துகொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
இபூ எரிமலை 1,325 மீட்டர் உயரம் கொண்டது.
இம்மாதத் தொடக்கத்தில் இந்தோனீசியாவின் வடக்கு சுலாவெசியில் உள்ள ருவாங் எரிமலை வெடித்தது. பாதுகாப்புக் காரணங்கள் கருதி அவ்வட்டாரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.