நச்சுணவு: பிரபல சைவ உணவகத்தில் சாப்பிட்டவர் ஒன்றரை மாதம் கழித்து மரணம்

நச்சுணவு: பிரபல சைவ உணவகத்தில் சாப்பிட்டவர் ஒன்றரை மாதம் கழித்து மரணம்

1 mins read
d8e7c7db-b047-4567-a67b-a26a1f118003
‘போலம் கோப்பித்தியாம்’ உணவகத்துடன் சம்பந்தப்பட்ட நச்சுணவு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது. - படம்: தைப்பே சுகாதாரத் துறை

தைவான் தலைநகர் தைப்பேயில் உள்ள மலேசிய சைவ உணவகம் ஒன்றில் உணவருந்தியதைத் தொடர்ந்து, நச்சுணவு ஏற்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மேலும் ஒருவர் திங்கட்கிழமை (ஏப்ரல் 29) உயிரிழந்தார்.

‘போலம் கோப்பித்தியாம்’ என்ற அந்த உணவகத்துடன் சம்பந்தப்பட்ட நச்சுணவு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளதை தைவானின் சுகாதார, நல்வாழ்வு துணை அமைச்சர் விக்டர் வாங் உறுதிப்படுத்தினார்.

திங்கட்கிழமை 40 வயது மாது ஒருவர் உயிரிழந்திருப்பது, மூன்று நாள்களில் நச்சுணவு சம்பந்தப்பட்ட இரண்டாவது மரணமாகும். சனிக்கிழமை (ஏப்ரல் 27) ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்புகள் செயலிழந்ததன் காரணமாக மற்றொருவர் உயிரிழந்தார்.

மார்ச் நடுப்பகுதியில் அந்த உணவகத்தில் ‘சார் குவெய் தியாவ்’ உணவு சாப்பிட்ட அந்த மாது வீடு திரும்பியதும் குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

உறுப்பு செயலிழப்பு, தொற்று காரணமாக அந்த மாது ஒரு மாதத்துக்கும் மேலாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்ததாக திரு வாங் கூறினார்.

ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்புகள் செயலிழந்ததைத் தொடர்ந்து திங்கட்கிழமை அதிகாலை 3 மணிக்கு அவர் உயிரிழந்தார்.

அந்த உணவகத்தில் சாப்பிட்டதைத் தொடர்ந்து இதுவரை 35 பேர் நோய்வாய்ப்பட்டதாக ‘சைனா பிரஸ்’ செய்தி நிறுவனம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்