ஜகார்த்தா: இந்தோனீசியாவின் ஒதுக்குப்புறமான பகுதியில் இருக்கும் ஒரு எரிமலை வெடித்ததால் அந்நாட்டில் பல விமான நிலையங்கள் மூடவேண்டி வந்தன.
அத்துடன், எரிமலையிலிருந்து வெளியான சாம்பல் மலேசியாவரை எட்டியதாக இந்தோனீசிய அதிகாரிகள் மே 1ஆம் தேதி தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சுனாமி பேரலைகள் எழக்கூடும் என்ற அச்சத்தால் பல்லாயிரக்கணக்கான மக்கள் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தோனீசியாவின் ருவாங் எரிமலை ஏப்ரல் 30ஆம் தேதி மூன்று முறை வெடித்தது. அதிலிருந்து எரிமலைக் குழம்பும் சாம்பலும் வெளியானதால் அதிகாரிகள் அங்கு வசிக்கும் கிட்டத்தட்ட 12,000* பேரை வெளியேறும்படி உத்தரவிட நேரிட்டதாக செய்தித் தகவல்கள் கூறுகின்றன.
அந்த எரிமலையின் ஒரு பகுதி சரிந்து கடலுக்குள் விழுந்து சுனாமி பேரலைகளை எழும்பச் செய்யும் அபாயம் உள்ளதால் அப்பகுதிக்கு ஒரு மீட்புக் கப்பலும் போர்க்கப்பலும் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மீட்புக் கப்பலும் போர்க்கப்பலும் அப்பகுதி மக்களை அண்டை தீவான தகுலன்டாங்கிற்கு அனுப்பி வைக்க ஈடுபடுத்தப்படும் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்பில் தகுலன்டாங் பகுதியில் வசிக்கும் 95 வயது திருவாட்டி ரோசலின் சலின்டேஹோ ருவாங் எரிமலை வெடிப்பு தமக்கு ஏற்படுத்தியுள்ள அச்சத்தை விவரித்தார்.
“அந்த மலை வெடித்தது. ஐயோ, அது மோசமான ஒன்று. கல் பாறைகள் மழைபோல் இரண்டு முறை வந்து விழுந்தன. இரண்டாவது முறை மிகவும் பலமான முறையில் வந்து விழுந்தன. தூரத்தில் உள்ள வீடுகளையும் அவை தாக்கின,” என்று கூறினார்.