ஆஷ்டாட், இஸ்ரேல்: இஸ்ரேல் பாலஸ்தீனப் பகுதியான ராஃபாவில் தாக்குதல் நடத்தவுள்ள நிலையில் அங்கு பொதுமக்களைக் காக்கும் திட்டம் எதையும் தான் இன்னும் பார்க்கவில்லை என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறியுள்ளார்.
அப்படி ஒரு திட்டம் இல்லாமல் ராஃபாவில் இஸ்ரேல் மேற்கொள்ள எண்ணும் தாக்குதலுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்காது என்று திரு பிளிங்கன் கூறினார்.
திரு பிளிங்கனும் திரு நெட்டன்யாகுவும் ஜெருசலத்தில் இரண்டரை மணிநேரம் சந்தித்துப் பேசினர். அதன்பின் பேசிய திரு நெட்டன்யாகு அமெரிக்காவின் ஆட்சேபனையைப் பொருட்படுத்தாமல் ராஃபா மீதான இஸ்ரேலின் தாக்குதல் நடைபெறும் என்று உறுதிப்படுத்தினார். இது குறித்து கருத்துரைத்த ஐநாவும் தாக்குதல் பேரிடருக்கு வழிவிடும் என்று எச்சரித்தது.
“பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலான ஒரு ராணுவத் திட்டம் இல்லாதவரை ராஃபா மீதான தாக்குதலுக்கு நாங்கள் ஆதரவளிக்க முடியாது. பொதுமக்களைப் பாதுகாக்கக்கூடிய அப்படி ஒரு திட்டத்தை நாங்கள் காணவில்லை,” என்று திரு பிளிங்கன் செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்தார்.
“எங்களைப் பொறுத்தவரை ஹமாஸுடனான பிரச்சினையைத் தீர்க்க ராணுவத் தாக்குதல் இல்லாத அதைவிட சிறப்பான மற்ற மாற்று வழிகள் உள்ளன,” என்று கூறிய திரு பிளிங்கன், அதுபற்றி இஸ்ரேலிய அதிகாரிகளுடன் தொடர் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறினார்.
இதுபற்றிக் கருத்துரைத்த இஸ்ரேலிய அரசாங்கப் பேச்சாளர் ஒருவர், ஹமாஸ் இயக்கத்தின் எஞ்சிய போர்ப் படைப் பிரிவுகளை அழிப்பது என இஸ்ரேல் உறுதிபூண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
“ராஃபாவை எடுத்துக்கொண்டால் ஹமாஸின் எஞ்சியிருக்கும் நான்கு படைப் பிரிவுகளை அழிக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். அதுபற்றிய திட்டங்களைத்தான் நாங்கள் பிளிங்கனுடன் பகிர்ந்துகொண்டு வருகிறோம்,” என்று அந்தப் பேச்சாளர் விளக்கமளித்தார்.