நியூயார்க்: அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் மே 4ஆம் தேதியன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பட்டமளிப்பு விழா மிச்சிகன் விளையாட்டரங்கில் நடத்தப்பட்டது.
அப்போது திடீரென்று பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாகப் பலர் அங்கு ஆர்ப்பாட்டத்தில் இறங்கியதால் பட்டமளிப்பு விழா சிறிது நேரம் தடைப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் பாலஸ்தீனர்களின் பாரம்பரியத் தலை அங்கியான காஃபியேவை அணிந்திருந்தனர்.
காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால் பாலஸ்தீனர்கள் பலர் மடிவதாகவும் இஸ்ரேலுக்கு அமெரிக்கா நிதி உதவி வழங்குவதால் இனப் படுகொலைக்கு அது துணைபோவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் பட்டமளிப்பு விழாவுக்கு இடையூறு விளைவிப்பதாக ஒருவர் தமது அதிருப்தியை வெளியிடுத்தினார்.
இந்நிலையில், பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட சிலர் தாங்கள் அமர்ந்திருந்த இடங்களிலிருந்து இஸ்ரேலியக் கொடியைத் தொங்கவிட்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் அரங்கிற்கு அருகில் செல்லாதபடி பாதுகாவல் அதிகாரிகள் பார்த்துக்கொண்டனர்.
விளையாட்டரங்கிற்கு மேல் பறந்த விமானம் ஒன்று பாலஸ்தீனத்துக்கு ஆதரவான வாசகத்தை ஏந்திச் சென்றது. அந்த விமானம் விளையாட்டரங்கை வட்டமிட்டது.
இன்னொரு விமானமும் விளையாட்டரங்கை வட்டமிட்டது. அது இதற்கு நேர்மாறான வாசகத்தைக் கொண்டிருந்தது. இஸ்ரேலுக்கும் யூதர்களுக்கும் ஆதரவாக அது இருந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு இடையே பட்டமளிப்பு விழா திட்டமிட்டபடி நடந்தது. அதே சமயம் ஆர்ப்பாட்டக்காரர்களும் விடுவதாக இல்லை. அவர்கள் தொடர்ந்து முழக்கமிட்டுக்கொண்டிருந்தனர்.