லண்டன்: லண்டன் மாநகரின் மேயராக மூன்றாவது முறையாக சாதிக் கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த சாதிக் கான் 2021ஆம் ஆண்டு பெற்ற வாக்குகளை விட இம்முறை அதிகமான வாக்குகளைப் பெற்று மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.
லண்டன் மேயர் பதவியில் அதிக நாள் நீடித்த பெருமையும் சாதிக் கானுக்கு கிடைத்துள்ளது. இதற்கு முன்னர் அந்த பொறுப்பில் பிரிட்டனின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் எட்டு ஆண்டுகளுக்கு மேல் இருந்தார்.
எளிய பின்னணியில் இருந்து வந்த 53 வயது சாதிக் கான் பிரிட்டன் தலைநகரைச் சிறப்பாக வழி நடத்துவதாக அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
கிட்டத்தட்ட ஒன்பது மில்லியன் மக்கள் லண்டனில் வாழ்கின்றனர்.
“லண்டன் மக்களின் நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவேன், சிறந்த, பாதுகாப்பான மற்றும் பசுமையான லண்டனை மக்களுக்குத் தருவேன்,” என்று சாதிக் கான் தெரிவித்தார்.