கோலாலம்பூர்: வெள்ளம் ஏற்படாமல் இருக்க, மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பண்டார் துன் ரசாக் வட்டாரத்தில் அமைக்கப்பட்டுள்ள குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் மடிந்ததை அடுத்து, அதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்த வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன.
17.5 ஹெக்டர் பரப்பளவு கொண்ட சுங்கை மிடா குளத்தில் கடந்த வாரத்திலிருந்து பல மீன்கள் மடிந்து நீரில் மிதப்பதைப் பார்த்து அங்கு அன்றாடம் உடற்பயிற்சி செய்யும் குடியிருப்பாளர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
வெங்காயத்தாமரை எனும் ஒரு வகை மிதக்கும் நீர்வாழ் தாவரம், குளத்தில் அதிகமாகக் காணப்படுவதாக அவர்கள் கூறினர்.
குளத்தை அவை அடைத்துக்கொண்டிருப்பதாக அவர்கள் குறைகூறினர்.
இதன் காரணமாக உயிர்வாயு பற்றாக்குறை ஏற்பட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகம் அவர்களிடையே எழுந்துள்ளது.
மீன்கள் மடிந்ததற்கு கடும் வெப்பமும் காரணமாக இருக்கக்கூடும் என்று ஒரு சாரார் கூறுகின்றனர்.
கோலாலம்பூர் வடிகால், நீர் பாசனத் துறை குளத்தை தூர்வாரவில்லை என்று குடியிருப்பாளர்கள் சிலர் சாடினர்.
குளம் பராமரிக்கப்படாமல் கிடந்ததால் மீன்கள் மடிந்ததாக அவர்கள் கூறுகின்றனர்.