லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்காவில் உள்ள சவுதன் கலிஃபோர்னியா பல்கலைக்கழக வளாகத்தில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை லாஸ் ஏஞ்சலிஸ் காவல்துறையினர் மே 5ஆம் தேதியன்று அப்புறப்படுத்தினர்.
ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் 64 நிமிடங்களில் அனைத்துக் கூடாரங்களும் அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கூடாரங்கள் அகற்றப்பட்டபோது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கைகலப்பு ஏற்படவில்லை என்றும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் லாஸ் ஏஞ்சலிஸ் காவல்துறை கூறியது.
காஸாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் காரணமாக பாலஸ்தீனர்கள் பலர் உயிரிழப்பது தொடர்பாக அதிருப்தி, எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் அமெரிக்காவெங்கும் உள்ள பல பல்கலைக்கழகங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
இதுவரை நாடெங்கும் உள்ள பல்கலைக்கழகங்களில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் 2,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, சிக்காகோவில் உள்ள அரும்பொருளகம் ஒன்றில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக அமைக்கப்பட்ட கூடாரங்களைக் காவல்துறையினர் பலவந்தமாக அப்புறப்படுத்தினர்.
கிட்டத்தட்ட 70 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.