லண்டன்: உலகின் ஆகப் பெரிய மூன்று சுகாதார அமைப்புகள் முதன்முறையாக பங்காளித்துவம் அமைத்துக்கொண்டுள்ளன.
பருவநிலை மாற்றம், ஊட்டச்சத்து பற்றாக்குறை, தொற்றுநோய் உள்ளிட்டவற்றால் ஏற்படும் தாக்கத்தைக் கையாள்வது 300 மில்லியன் டாலர் (405.54 மில்லியன் வெள்ளி) மதிப்பிலான இந்தப் பங்காளித்துவத்தின் இலக்காகும். இத்தகைய அம்சங்களினால் ஏற்படும் பாதிப்புகள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை.
நோவோ நார்டிஸ்க் அறநிறுவனம், வெல்கம், பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறநிறுவனம் ஆகியவை தங்களுக்கிடையே ஆய்வு மேற்கொள்வதற்கான பங்காளித்துவம் செய்துகொண்டுள்ளதாக திங்கட்கிழமையன்று (மே 6) டென்மார்க்கில் அறிவித்தன.
குறைந்த, நடுத்தர வருமான நாடுகளைச் சேர்ந்தோருக்குக் குறைந்த விலையில் தீர்வுகளைக் காண்பதில் பங்காளித்துவம் கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த மூவாண்டு முயற்சிக்கு ஒவ்வோர் அமைப்பும் 100 பில்லியன் டாலர் (135.18 மில்லியன் வெள்ளி) வழங்கும்.
ஆய்வில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தாத அம்சங்களில் கவனம் செலுத்துவது இம்முயற்சியின் நோக்கம் என்று நோவோ நார்டிஸ்க் அறநிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மேட்ஸ் குரோக்ஸ்கார்ட் தாம்சென் கூறினார்.
உதாரணமாக, உடல் பருமன், சில தொற்றுநோய்களுக்கு ஆளாவோர் எவ்வளவு மோசமாக நோய்வாய்ப்படுகின்றனர் என்பதில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை கொவிட்-19 உணர்த்தியது; பருவநிலை மாற்றத்தால் உணவுப் பாதுகாப்புக்கு ஏற்படும் இடையூறுகளால் போதுமான ஊட்டச்சத்து இல்லாத சிறுவர்கள் தட்டம்மை, காலரா போன்ற நோய்களுக்கு ஆளாகலாம்.
ஊட்டச்சத்து அறிவியலில் காணப்பட்டுள்ள முன்னேற்றம் போன்றவற்றால் சுகாதாரத்திலும் வளர்ச்சியிலும் ஊட்டச்சத்தின் தாக்கத்தை அறிந்துகொள்ள வழி பிறந்திருப்பதாக பங்காளித்துவம் அமைத்துக்கொண்ட மூன்று அமைப்புகளும் தெரிவித்தன.
நோவோ நார்டிஸ்க் அறநிறுவனம், நோவோ நார்டிஸ்க் மருந்து நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளுக்கு உரிமை வகிக்கிறது. மிகப் பிரபலமான வெகோவி எனும் உடல் எடையைக் குறைக்க உதவும் மருந்தை நோவோ நார்டிஸ்க் மருந்து நிறுவனம் 2021ஆம் அண்டில் வெளியிட்டது.