போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஹமாஸ் இணக்கம்; புறக்கணித்து ராஃபாவைத் தாக்கிய இஸ்‌ரேல்

போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஹமாஸ் இணக்கம்; புறக்கணித்து ராஃபாவைத் தாக்கிய இஸ்‌ரேல்

2 mins read
d9e92c4d-50ee-46b3-b076-2e14048025e8
இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பயந்து ராஃபா நகரின் கிழக்குப் பகுதியிலிருந்து தப்பிச் செல்லும் பாலஸ்தீனப் பெண்கள், குழந்தைகள். - படம்: புளூம்பர்க்
Google News Preferred Icon

கெய்ரோ: போர் நிறுத்த உடன்படிக்கையை ஹமாஸ் அமைப்பு ஏற்றுக்கொண்ட பிறகும் காஸாவின் தென்பகுதியில் உள்ள ராஃபா நகரம் மீது இஸ்‌ரேல் தாக்குதல் நடத்தியது.

போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்திய எகிப்து, கத்தார் அதிகாரிகளிடம் போர் நிறுத்த உடன்படிக்கையை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துவிட்டதாக ஹமாஸ் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இருப்பினும், ராஃபா மீது இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் நடத்தின. அந்நகரின் சில பகுதிகளில் உள்ள பாலஸ்தீனர்களை அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.

காஸா போர் காரணமாக உயிர்ச் சேதம், பொருள் சேதங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டு, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ராஃபாவில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் அடைக்கலம் நாடியுள்ளனர்.

இஸ்‌ரேல் தாக்குதல்கள் தீவிரமடையும் என்ற அச்சத்தில் அங்கிருந்து வெளியேறும் நிலை அவர்களில் பலருக்கு ஏற்பட்டுள்ளது .

ஆக அண்மைய போர் நிறுத்த உடன்படிக்கையில் இடம்பெற்றுள்ள நிபந்தனைகள் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்று இஸ்‌ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்தார்.

இருப்பினும், பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்துள்ளவர்களுடன் இதுகுறித்து கலந்துரையாட பேராளர் குழு ஒன்றை அனுப்பி தீர்வு காண முயற்சி செய்ய இருப்பதாக அவர் கூறினார்.

ராஃபா மீதான தாக்குதலைத் தொடர இஸ்ரேலிய அமைச்சர்களும் ராணுவ உயர் அதிகாரிகளும் ஒப்பதல் அளித்துள்ளதாக திரு நெட்டன்யாகுவின் அலுவலகம் அறிக்கை வெளியிட்டது.

ஹமாஸ் அமைப்பினர் ராஃபாவில் பதுங்கியுள்ளனர் என்றும் அவர்களை வேரோடு அழிப்பதே இஸ்‌ரேலின் இலக்கு என்றும் அவ்வாறு செய்தால் மட்டுமே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்றும் திரு நெட்டன்யாகு கூறி வருகிறார்.

குறிப்புச் சொற்கள்
ஹமாஸ்இஸ்‌ரேல்