வாஷிங்டன்: சனிக்கிழமை (மே 11) இரவு, இரண்டாவது நாளாக பூமியின் பல்வேறு பகுதிகளில் வானில் வண்ணக் கோலம் தீட்டப்பட்டதுபோல் காட்சியளித்தது.
அமெரிக்காவிலிருந்து, தாஸ்மேனியா, பஹாமாஸ் எனப் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலரும் அத்தகைய காட்சிகளைக் கண்டு களித்தனர்.
ஞாயிற்றுக்கிழமையும் இத்தகைய காட்சி கண்களுக்கு விருந்தாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வலுவான சூரியப் புயலால் ‘நார்தர்ன் லைட்ஸ்’ என்று அழைக்கப்படும் இந்த அதிசய ஒளி தோன்றுவதாகக் கூறப்படுகிறது.
உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து பலரும் இந்தக் கண்கவர் காட்சிகளைப் படமெடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள சூரியப் புயல் 20 ஆண்டுகளில் ஆக வலுவானதாகக் கருதப்படுகிறது.
இருப்பினும் மின்சாரக் கட்டமைப்பு, தொடர்புக் கட்டமைப்புகள் போன்றவை ஏதும் பாதிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை.
தொடர்புடைய செய்திகள்
முன்னதாக செயற்கைக்கோள்கள் இவற்றால் பாதிக்கப்படக்கூடும் என்று அஞ்சப்பட்டது.
உலகெங்கும் இந்தக் காட்சிகளைக் காணும் வாய்ப்புப் பெற்றவர்கள், இளஞ்சிவப்பு, பச்சை, ஊதா நிறங்களில் மின்னிய இரவு வானைப் படமெடுத்து வைத்துக்கொள்ளத் தவறவில்லை.
நேரில் பார்ப்பதைக் காட்டிலும் படத்தில் அவை சிலிர்ப்பூட்டும் அனுபவத்தைத் தருவதாகக் கூறுகின்றனர் சிலர்.
இந்த ஒளி விண்கலன்களைப் பாதிக்கும் என்று கூறப்படும் அதேவேளையில் புறாக்கள் போன்ற பறவைகளின் திசை அறிவைப் பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது.


