காத்மாண்டு: நேப்பாள நாட்டவரான காமி ரிட்டா ஷெர்பா, ஞாயிற்றுக்கிழமை (மே 12) எவரெஸ்ட் சிகரத்தை 29வது முறையாக எட்டினார். இதன்மூலம் இவர் படைத்த முந்தைய சாதனையை முறியடித்துள்ளார்.
இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மலையேறி வழிகாட்டியான திரு காமி ரிட்டா, 1994ல் முதன்முறையாக 8,849 மீட்டர் உயரத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரம் தொட்டார்.
அதைத் தொடர்ந்து, மலையேறிகளுக்கு வழிகாட்டியாக ஒவ்வோர் ஆண்டும் இவர் எவரெஸ்ட் மலையை ஏறி வந்துள்ளார்.
உலகின் இரண்டாவது உயர மலையான பாகிஸ்தானின் கே2 உட்பட 8,000 மீட்டர் மலை உச்சிகளையும் திரு காமி ரிட்டா, 54, எட்டியுள்ளார்.
ஏப்ரல் முதல் ஜூன் தொடக்கம் வரை இடம்பெறும் மலையேற்றப் பருவத்தில் மலையேறிகளுக்கு 414 எவரெஸ்ட் அனுமதிகளை நேப்பாளம் வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டு 600க்கும் மேற்பட்ட மலையேறிகள் எவரெஸ்ட் உச்சம் தொட்டனர். ஆனால், அதே ஆண்டு 18 மலையேறிகள் உயிரிழந்தனர்.

