உலகளவில் டெங்கிச் சம்பவங்கள் பெருகினாலும் சிங்கப்பூரின் தொற்று எண்ணிக்கையில் அது எந்தவிதத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் கவனிக்க வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து உலக நாடுகளில் ஐந்து மில்லியனுக்கும் மேற்பட்ட டெங்கிச் சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
மேலும், டெங்கி தொடர்பான மரணங்களின் எண்ணிக்கை 2,000ஐ கடந்துவிட்டதாக ஐரோப்பிய நோய் தடுப்பு, கட்டுப்பாடு நிலையம் தெரிவித்து உள்ளது.
மத்திய, தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் டெங்கிச் சம்பவங்களின் எண்ணிக்கை சாதனை அளவில் பதிவாகி உள்ளன.
குறிப்பாக, பிரேசிலில் இவ்வாண்டின் முதல் இரு மாதங்களில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட டெங்கிச் சம்பவங்கள் பதிவாயின.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், உலகளவில் ஆண்டு முழுவதும் ஏறக்குறைய ஆறு மில்லியன் டெங்கித் தொற்றுகள் காணப்பட்டன. டெங்கி தொடர்பில் 6,000க்கும் மேற்பட்ட மரணங்கள் அந்த ஆண்டில் பதிவாயின.
ஆனால், இவ்வாண்டின் டெங்கி எண்ணிக்கை இப்போதே ஐந்து மில்லியனைக் கடந்துவிட்டது.
இருப்பினும், இதர நாடுகளில் காணப்படும் அதிகமான டெங்கி எண்ணிக்கை சிங்கப்பூரில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
தொற்று நோய்களுக்கான அனைத்துலகச் சங்கத்தின் தலைவர் பால் தம்பையா கூறுகையில், “வழக்கமாக பயணிகளே புதிய வகை தொற்று அபாயங்களுக்கு உரியவர்கள் என்று கவலைப்படுவோம்.
“இருப்பினும் தற்போது டெங்கியின் ஏராளமான திரிபுகள் அல்லது துணைக் கிருமிகள் ஏற்கெனவே பரவிவிட்டதுபோலத் தோன்றுவதால் சிங்கப்பூருக்கு வரும் அல்லது திரும்பும் பயணிகள் மூலமான தாக்கம் குறைவாக இருக்கலாம் என்று கருதுகிறேன்,” என்றார்.
உலகம் முழுவதும் டெங்கிச் சம்பவங்கள் பெருகுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
ஏடிஸ் கொசுக்களின் வாழ்க்கைச் சுழற்சியில் எல் நினோ பருவமாற்றம் ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தை உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டு இருப்பதாக பேராசிரியர் தம்பையா கூறினார்.
“வெப்பநிலை ஒன்று அல்லது இரண்டு டிகிரி உயரும்போது கொசுக்கள் கூடுதல் காலம் உயிர் வாழக்கூடும். அதனால், அதிகமானோர் கொசுக்கடிக்கு ஆளாகலாம். டெங்கி கிருமி அதிகமாகவும் வேகமாகவும் பரவுவது இவ்வாறுதான்,” என்றார் அவர்.

