கெய்ரோ: ராஃபாவைத் தாக்க உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள வேளையில் இஸ்ரேல் விடாப்பிடியாக தாக்குலை தீவிரப்படுத்தியிருக்கிறது.
இஸ்ரேலின் பீரங்கிகளும் ஆகாயத் தாக்குதல்களுடன் கனரக வாகனங்களும் வடக்கு காஸா வட்டாரத்தில் உள்ள ஜபாலியாவுக்குள் முன்னேறியுள்ளதாக திங்கட்கிழமை அன்று குடியிருப்பாளர்களும் ஹமாஸ் ஊடகங்களும் தெரிவித்தன.
தெற்கு ராஃபாவில் உள்ள முக்கிய நெடுஞ்சாலையை இஸ்ரேலிய பீரங்கிகளும் துருப்புகளும் கடந்துள்ளன.
ஜபாலியாவில் காஸாவின் எட்டு சிறப்பு அகதிகள் முகாம்கள் உள்ள முக்கியப் பகுதியை நோக்கி டாங்கிகள் முன்னேற முயற்சி செய்து வருகின்றன. பீரங்கிகளிலிருந்து பாய்ந்த குண்டுகள், முகாம்கள் உள்ள மையப் பகுதியில் விழுந்தன. ஆகாயத் தாக்குதலில் பல வீடுகள் நாசமடைந்தன என்று குடியிருப்பாளர்கள் கூறினர்.
குண்டுகள் வீசப்பட்ட பகுதிகளில் தங்களுடைய குழுவை அனுப்ப முடியவில்லை என்று துணை மருத்துவ உதவியாளர்கள் கூறினர். இஸ்ரேலின் தாக்குதல் அந்த அளவுக்குத் தீவிரமாக இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
எகிப்து எல்லை அருகே ராஃபாவின் பகுதிகளையும் இஸ்ரேல் விட்டுவைக்கவில்லை. அங்கேயும் ஆகாயத் தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டது.
கிழக்குப் பகுதியில் தரையிலிருந்தும் அது குண்டுகளை வீசியது. பிரேசில் அக்கம்பக்கப் பகுதிக்கு அருகே உள்ள வீடு ஒன்றின் மீது நடத்தப்பட்ட ஆகாயத் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர்.
ராஃபாவின் கிழக்குப் பகுதியைப் பிரிக்கும் சலாஹுதின் சாலையை இஸ்ரேலியப் படைகள் துண்டித்துவிட்டதாகவும் குடியிருப்பாளர்கள் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
ராஃபாவின் தென்கிழக்குப் பகுதியில் இஸ்ரேலியப் படைகளும் பீரங்கிகளும் கடுமையாகத் தாக்கி வருவதாக குடியிருப்பாளர்கள் மேலும் தெரிவித்தனர்.