புத்ரா ஜெயா: ஒற்றைப் பெற்றோரான லோ சியூ ஹோங்கின் 16 வயது இரட்டை மகள்களும் 13 வயது மகனும் தொடர்ந்து இந்துக்களாகவே இருப்பர் என்று மலேசிய கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தாயின் சம்மதம் இல்லாமல் அந்த மூன்று பிள்ளைகளையும் அவர்களது தந்தை இஸ்லாமிய சமயத்துக்கு மாற்றினார்.
இது செல்லாது என்று மலேசிய நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
அந்தத் தீர்ப்பை எதிர்த்து பெர்லிஸ் இஸ்லாமிய, மலாய் பாரம்பரிய மன்றம் மேல்முறையீடு செய்திருந்தது.
மன்றத்தின் வாதத்தை கூட்டரசு நீதிமன்றம் ஏற்க மறுத்தது.
தமது முன்னாள் கணவர் எம். நாகேஸ்வரன் இஸ்லாமிய சமயத்தைத் தழுவியதாகத் திருவாட்டி லோ நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
தங்களது மூன்று பிள்ளைகளையும் தமது சம்மதம் இன்றி இஸ்லாமிய சமயத்துக்கு மாற்ற சட்டப்படி அவருக்கு அதிகாரம் இல்லை என்று திருவாட்டி லோ 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதியன்று வழக்கு தொடுத்திருந்தார்.
தமது பிள்ளைகள் வயது குறைந்தவர்கள் என்றும் தமது சம்மதம் இன்றி அவர்கள் மதம் மாற முடியாது என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.


