சிட்னி: பசிபிக் தீவான நியூ கலிடோனியாவில் குறைந்தது பத்து ஆண்டுகளுக்கு வசித்துள்ள பிரெஞ்சுக் குடிமக்கள் அங்கு நடைபெறும் மாநிலத் தேர்தலில் வாக்களிக்கலாம் என்று பிரெஞ்சு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்ததை அடுத்து நியூ கலிடோனியாவில் கலவரம் வெடித்துள்ளது.
வாக்களிப்பு விதிமுறை மாற்றத்தை எதிர்த்து நியூ கலிடோனியா மக்கள் குரல் எழுப்பியுள்ளனர்.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோதிலும் மே 14ஆம் தேதி இரவு நேரத்தில் கலவரம் தொடர்ந்தது.
இந்நிலையில், மே 15ஆம் தேதி காலை நியூ கலிடோனியா தலைநகர் நோமியாவில் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாகச் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நியூ கலிடோனியாவில் நடத்தப்படும் தேர்தலில் பிரெஞ்சுக் குடிமக்கள் வாக்களித்தால் அது உள்ளூர் மக்களின் நலனைப் பாதிக்கும் என்று அத்தீவின் தலைவர்கள் சிலர் அக்கறை தெரிவித்துள்ளனர்.

